வேடிக்கை பார்க்கக் கூடாது!
Page 1 of 1
வேடிக்கை பார்க்கக் கூடாது!
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை விசுவரூபமெடுத்து பெரும் பூதமாகக் கிளம்பியுள்ளது. கேரளம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் அன்றாட வாழ்க்கை பாதித்துவிட்டது, போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது.
அரிசி, பால், காய்கனிகள் போன்ற அத்தியாவசியத் தேவைப்பொருள்கள் கேரளத்துக்குச் செல்லவில்லை. மணல், அடிமாடுகள்கூட தடைபட்டுவிட்டன. அனைத்துக்கும் மேலாக கார்த்திகை, மார்கழி, தை மாதம் முடிய தொண்ணூறு நாள்களும், சாரி சாரியாக விரதமிருந்து செல்லும் ஐயப்பப் பக்தர்கள் தடுத்து விரட்டப்படுகிறார்களென்ற செய்தி குக்கிராமங்கள் வரை சென்றுள்ளது.
சேர, சோழ, பாண்டியர்கள் என்ற உறவுமுறைகளில் பல நூற்றாண்டுகளாக உடன்பிறந்த சகோதரர்களாக வாழ்ந்த உறவுகளெல்லாம் உடைந்து நொறுக்கப்படும்போது நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இரு மாநில எல்லையில், மலையாளிகளும் தமிழர்களும் எதிரும் புதிருமாக ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு நிற்கிறார்கள். மத்திய அரசோ மெüனம் சாதிக்கிறது. அரசியலையே அடித்தளமாகக் கொண்டிருக்கும் கேரளத்திலுள்ள நான்கு பெரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சேவல்களுக்கு கொண்டை சீவி விட்டு காலில் கத்தியைக் கட்டி விடும் வேலைகளை நடத்தினால் தமிழ்நாடு என்ன ஆகும்?
நீரின்றி அமையாது உலகு. நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரை முறைப்படுத்தித் தேக்கிவைத்து, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்காகத்தான் மனித குலத்தில் முதன்முதல் அரசு உருவாக்கம் ஏற்பட்டது.
ரோகிணியாற்றின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் சாளுக்கியர்களுக்கும் கோசலர்களுக்கும் முறைவைத்து சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்று சாளுக்கிய வம்சத் தலைவரான கெüதமர் நியாயத் தீர்ப்பு வழங்கினார். அதே சாளுக்கிய வம்சத்தின் அடுத்தநிலை தலைவன் இனவெறியைக் கிளப்பிவிட்டு, கெüதமரைத் தனிமைப்படுத்திவிட்டனர். கெüதமர் ஊரைவிட்டே வெளியேறினார். புத்தரானார் என்பது வரலாறு.
இதெல்லாம் நீருக்கான உலக வரலாறு. எதிர்காலத்திலும் நீருக்கான போராட்டமே வலுக்குமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல மொழிகளைக் கொண்ட இந்திய நாடு, மாநிலங்களுக்கிடையேயுள்ள நீர்த்தாவாவைத் தீர்த்து ஒற்றுமைப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் எவ்வாறு மரியாதையை காப்பாற்ற முடியுமென்பதே கேள்வியாகவுள்ளது.
நதிநீர்ப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கே உரிய மதிப்பு இல்லை. காவிரிப் பிரச்னையில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை 17 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. இறுதித்தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ல் வெளியானது. கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசு இதுவரை அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை. கிடப்பில் போட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தென்னகத்தில் வறட்சியும் பஞ்சமும் மக்களை வாட்டி எடுத்தது. பல லட்சம் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தார்கள். 1876-78-ல் நடந்த தாது வருடப்பஞ்சம்.
முத்திருளப்பிள்ளை என்பவர் இராமநாதபுரம் சேது மன்னரின் அமைச்சராக இருந்தார். மேற்குமலைத் தொடர்ச்சியில் முல்லையாற்றையும் பெரியாற்றையும் காணச் சென்றார். வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த முடியும் என்று கருத்துத் தெரிவித்தார் பிரிட்டிஷ் ஆட்சியின் பொறியாளர்களில் ஒருவரான கர்னல் பென்னிகுக் என்பவர். அவர் மற்றவர்களுடன் சேர்ந்து முல்லையாற்றையும் பெரியாற்றையும் இணைப்பதில் முயற்சி எடுத்தார். அரசு ஒதுக்கிய பணத்தில் அணையைக் கட்டி முடிக்க முடியவில்லை. லண்டனுக்குச் சென்று தன் சொந்த நிலபுலன்களை விற்று அந்தப் பணத்தையும் செலவழித்து அந்த அணையைக் கட்டி முடித்தார் அவர். அப்படித்தான் அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றைய முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. திட்டம் நிறைவேற்றப்பட்டது.
திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண அரசுக்கும் 1-1-1886-ல் 999 ஆண்டுகளுக்கான குத்தகை உடன்பாடு ஒப்பந்தம் ஏற்பட்டது. அணையின் நீர்த்தேக்கம் 155 அடிவரை உயர வாய்ப்புள்ளதால் நீர்த் தேக்கப்பகுதி 8,000 ஏக்கர் என்று வரையறுக்கப்பட்டது. இந்த நிலப்பகுதிக்கு குத்தகைப் பணமாக ஏக்கருக்கு ரூ.5 வீதம் ஆண்டுக்கு ரூ.40,000 (நாற்பதாயிரம்) பெற்றுக்கொண்டு 999 ஆண்டுகளுக்கும் நீட்டித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
1969-ல் பெரியாறு அணைக்கட்டிலிருந்து தமிழ்நாட்டில் விவசாயத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது மின்சாரம் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டது. அப்போது கேரள அரசும் வலியுறுத்தியதால் 1970-ல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு விவசாயத்தோடு மட்டுமல்லாமல் மின்சாரத்துக்கும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. நிலத்துக்கான வருடாந்திரக் குத்தகைப் பணம் ஏக்கருக்கு ரூ. 5}லிருந்து ரூ. முப்பதாக உயர்த்தப்பட்டது. பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கும் கட்டணம் விதிக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தை சுற்றுலா அபிவிருத்திக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் படகுகளை ஓட்டிக்கொள்வதற்கும் கேரள அரசுக்கு உரிமை வழங்கப்பட்டது. அதுதான் தமிழகம் செய்த முதல் தவறு. அந்த உரிமையை விட்டுக் கொடுக்காமல் தமிழகமே வைத்துக் கொண்டிருந்தால் இன்றைய பிரச்னையே எழுந்திருக்காதோ என்றுகூடத் தோன்றுகிறது.
நீர்த்தேக்கப் பகுதியைச் சுற்றியுள்ள நீர்வடிப்பகுதியில் தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் அமைக்க கேரள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1954- லிருந்தே அமலுக்கு வருவதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை 1994-ல் புதிய கட்டுமானப்படி வலுப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப்பாசனத்தால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இம்மாவட்டங்களில் பருவமழையும் குறைவு. தொடர்ந்து வறட்சியால் வாடும் மக்களுக்குக் கிடைத்துவரும் பெரிய ஆறுதலாகும் இது.
27-2-2006-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, கேரள சட்டப்பேரவையில் திருத்தம் நிறைவேற்றியுள்ளது. 2009-ல் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சட்டப்பேரவைத் திருத்தம் பற்றி கேள்வி கேட்டுள்ளது. மேலும் 5 நீதிபதிகளின் குழு 2012 பிப்ரவரியில் ஆய்வைச் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிலையில்தான் கேரளத்திலும் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒரு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக இரு மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடிய மிகவும் சிக்கலான பிரச்னையைத் தேர்தல் பிரச்னையாக்குவது அனைத்திந்தியக் கட்சிகளின் பொறுப்புக்கு ஏற்புடையதாக இல்லை.
மேலும், முல்லைப் பெரியாறு அணை கட்டி 125 ஆண்டுகளாகிவிட்டது. ஓர் அணைக்கு 50 ஆண்டுகளே ஆயுள் என்று கேரள அரசியல் கட்சிகள் வாதிடுகின்றன. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகப்படுத்தினால் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற பீதி கிளப்பப்படுகிறது. புதிய அணை கட்டப்பட்டாலும் தண்ணீர் மட்டம் உயராதா என்ற கேள்வி எழுகிறது. கேரள மக்களாலும், தமிழ் மக்களாலும் அவர்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
மேட்டூர் அணை 1934-ல் கட்டப்பட்டது. கோதாவரி அணை சர்.ஆர்தர் கா ட்டனால் 1884-ல் கட்டப்பட்டது. கல்லணை உலகில் கட்டப்பட்ட அணைகளில் மிகவும் பழமையான ஆணையாகும். மேலும் 1886-ல் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை நீர்த்தேக்கம் பற்றியும் 1970-ம் ஆண்டில் இரு மாநிலங்களும் ஒப்பந்தம் செய்து சில புதிய உரிமைகளைப் பெற்றிருக்கின்றன.
இரண்டாவது, பூமி அதிர்ச்சியால் அணை பாதிக்கப்படும் என்று பீதி பரப்பப்படுகிறது. அந்தப் பயமிருப்பது உண்மையானால், அதே இடத்தில் வலுவான புதிய அணை கட்டலாம் என்ற விவாதம் யாருக்கும் ஏற்புடையதாக இல்லை.
அண்மைக்காலத்தில் கேரளத்தின் அரசியல் கட்சிகளின் சார்பில் முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக எழுப்பப்படும் பிரச்னைகள் முந்தைய தலைமுறை அரசியல் தலைவர்களின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாகவுள்ளது.
பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருக்கும்போது, பெரியாறு மின்திட்டம் தொடங்கியதும் மின்சாரத்துக்கு ஈட்டுத் தொகை நிர்ணயிப்பதில் சுமுகத்தீர்வு காணப்பட்டது. பரம்பிக்குளம் திட்டம் பற்றி கேரள மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுடன் தமிழ்நாடு அமைச்சர் சி.சுப்பிரமணியம் பேசி சுமுகத் தீர்வு கண்டதை அவருடைய வரலாற்று நூலில் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார். கோவை நகருக்கு சிறுவாணித் தண்ணீர் கொண்டுவரும் முயற்சியிலும் கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் ஒத்துழைத்தார்கள்.
கேரளத்தின் முந்தைய கால வரலாற்று நிகழ்வுகளுக்கு மாறாக, இன்றைய அணுகுமுறை, தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களின் நீண்டகால உறவுக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏறத்தாழ தமிழ்நாட்டிலும் சுமார் 70 லட்சம் மலையாளம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அதே அளவு தமிழக மக்களும் கேரளத்தில் நீண்ட நெடுங்காலமாக வாழ்கிறார்கள்.
பல மாநிலங்களைக் கடந்து செல்லும் ரயில்பாதை மத்திய அரசின்வசம் இருப்பதைபோல் பல மாநிலங்களில் பாயும் நதிகளையும் மத்திய அரசின் ஆதிக்கத்துக்குள்ளாக்கப்பட வேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் முழு ஆதிக்கத்துக்குள் கொண்டுவராவிட்டாலும் காலத்தில் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும். மோதவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum