எது கருத்துச் சுதந்திரம்?
Page 1 of 1
எது கருத்துச் சுதந்திரம்?
கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தாங்களாகவே சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறிய கருத்துக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இணையதளப் பயனாளர்கள் மற்றும் இணையதளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் பலரும் விக்கிபீடியா வலைத்தளத்தில் கபில் சிபல் குறித்த தகவல்தொகுப்புக்குள் புகுந்து அவரைப் பற்றி மனதில் தோன்றியபடியெல்லாம் திட்டி, தொகுப்பைச் சீர்க்குலைக்கத் தொடங்கியதும் அந்தத் தகவல் தொகுப்பைப் பூட்டி வைக்க வேண்டிய அவசியம் விக்கிபீடியாவுக்கு ஏற்பட்டது.
இத்தனைக்கும் கபில் சிபல் வெளியிட்டிருக்கும் கருத்து ஒரு வேண்டுகோள் மட்டுமே. இந்திய அரசு எந்தவித நன்னடத்தை நெறிமுறைகளையும் இணையதளப் பயன்பாட்டில் இன்னும் புகுத்திவிடவில்லை. இது வெறும் கருத்துருவாக்கம் என்கின்ற அளவில்தான் இருக்கின்றது.
எதிர்ப்புகளைக் கண்டவுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் ஓர் அறிக்கையை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைத் தணிக்கை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை. மதஉணர்வுகளைப் புண்படுத்தி, மதக் கலவரங்களைத் தூண்டக்கூடிய தகவல், செய்திகளைத் தவிர்க்க முயல வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருக்கும் கருத்தை, ஊடகச் சுதந்திரம் என்கின்ற பெயரில் ஒரேயடியாக எதிர்ப்பவர்கள் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், அவர் வலியுறுத்துவதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர் வலியுறுத்துவது சமூக வலைத்தளங்களின் தணிக்கையை அல்ல, அவற்றின் சமூகப் பொறுப்பை!
இன்றைய இணையதளங்கள், எதை வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் (கிளிக்) திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்கின்ற அளவுக்குப் பரந்துபட்ட அறிவுமேடையாக இருக்கின்றது என்பது மிகவும் உண்மை. அதேவேளையில், யார் கேட்டாலும், எந்தத் தகவலை வேண்டுமானாலும் கொடுக்கிறது என்பதுதான் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.
ஓர் எழுத்தாளர் அல்லது நடிகை/நடிகர், ஒரு பிரபலமான நபர் குறித்து அறிய இணையதளத்தில் தேடினால், அந்த நபர் குறித்த தகவல்களுடன் அந்த நபரின் பெயர் கொண்ட பல்வேறு நபர்களின் தகவல்களும் திரையில் வந்து நிற்கின்றன. ஆர்வக் கோளாறினால் ஏதாவது ஒரு முகத்தோற்றம் அல்லது வசீகரமான வாசகங்களால் ஈர்க்கப்பட்டு அந்த இணைய முகவரிகளைத் தட்டினால், அவற்றில் சில முகவரிகள் இன்னொரு அறிவு உலகத்தை விரிக்காது. மாறாக, புதைமணலாக அமைந்து உங்களைக் கீழ்மைக்கு இழுக்கும்.
யூ ட்யூப்-பில் கென்னி ஜி இசை கேட்க விரும்பினால், திரையில் அவரது பாடல்களுடன் மற்ற சில பாப் பாடல்களும் வரிசையாய்க் காணக்கிடைக்கும். ஆர்வத்தால் அதற்குள் நுழைந்தால் அரைகுறை ஆடையுடன் மடோனா பாடும் பாடல்களும் வந்து நிற்கும். அதைச் சாத்தானின் அழைப்பு என்று விலகிப்போக எத்தனை பேரால் முடியும்?
ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதச் சடங்கைப் பற்றியோ ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்படும் கருத்து, ஒரு தனிநபர் கருத்தாக இருக்கலாம். ஆனால், அது ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாக அனைவருக்கும் பரப்பப்படும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள், மோதல்களை எதிர்கொள்ள வேண்டியது அரசும் நிர்வாகமும்தானே?
இத்தகைய ஆட்சேபணைக்குரிய தகவல்கள், படங்களை மேலூட்டம் (அப்லோடு) பெறும் நிலையிலேயே தடுத்துவிடும் ஒரு சுயஅமைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்றுதான் அமைச்சர் சொல்கிறார். அப்படி முடியாதபட்சத்தில் ஆட்சேபணைக்குரிய தகவல், கருத்து, படங்களைக் குறித்துத் தெரியவந்தவுடன் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார். இதை சமூக வலைத்தளங்களின் மீதான, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?
சந்தேகத்துக்குரிய வகையில் இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் தவறான கருத்து அல்லது படங்கள், விடியோ காட்சிகளை மேலூட்டம் செய்பவர் குறித்த விவரங்களைக் கொடுங்கள் என்று அரசு கேட்டால், அதையும்கூட சாத்தியமில்லை என்று இந்த இணையதள நிறுவனங்கள் மறுக்குமேயானால், அவர்களை என்ன செய்வது? கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட விட்டுவிடுவதா?
"பிக் பாஸ்' எனும் ரியாலிடி ஷோ-வில் கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைக் கொண்ட ஆபாச நடிகை சன்னி லியோன் சேர்ந்துகொண்டபோது அவரைப் பற்றிய தகவல்கள், குறைஉடைப் படங்கள் இந்திய நாளிதழ்களின் இணைய தளங்களிலும் கூகுள், யாகூ, இணைய தளங்களிலும் விரிவாக வந்தன. மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள பல இணையமுகவரிகள் செய்திகளின் கீழாக இருந்தன - தட்டுங்கள் என்ற அறிவிப்புடன்! தட்டினால் ஆபாசங்கள் மட்டுமே விரிந்தன. இதை ஏன் இணையதளங்கள் தெரிந்தே அனுமதித்தன?
திரைப்படங்களைக்கூட தணிக்கை செய்து "வயதுவந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரை குத்தி அனுமதிக்கவும் அதற்கும்கூட அளவீடுகள் நிர்ணயிக்கவும் நடைமுறையுள்ள இந்தியாவில், இணைய தளத்தில் ஆபாசங்கள் தடையின்றி விரிவதை எந்த வகையில் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் பார்த்துக் கொண்டிருக்க முடியும்!
12 கோடி பேர் பயன்படுத்தும் இணைய தளத்தில் அமைச்சர் சொல்வதைப்போலச் செய்வது முடியாது என்று கூகுள் நிறுவனம் சொல்கிறது. கடினமானது எனும் ஒரே காரணத்துக்காக இதை நியாயப்படுத்த முடியுமா?
வரைமுறையே இல்லாமல் ஆபாசத்தையும், வன்முறையையும், மதத் துவேஷத்தையும், ஏன் தீவிரவாதத்தையும் ஆதரித்து எழுதுவதற்கு இவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்குமானால், தனது மனதுக்கு நியாயமாகப்படும் கருத்தை முன்வைப்பதற்குக் கபில் சிபலுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் கிடையாதா என்ன?
வனவிலங்குகள் சுதந்திரமாகத் திரியும் காட்டுக்குக் காவல் போட முடியாதுதான். காட்டுக்குள் போகும்முன்பாக ஒரு செக்-போஸ்ட் கூட இருக்கக்கூடாது என்றால் என்ன நியாயம்? நமது ஆதரவு கபில் சிபலுக்குத்தான். கட்டுப்பாடில்லாத சுதந்திரம் காட்டுமிராண்டித்தனத்துக்குத் திறந்துவிடப்படும் நுழைவாயில்!
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum