இணையத்தை வெட்டும் ஆயுதம் ஏது?
Page 1 of 1
இணையத்தை வெட்டும் ஆயுதம் ஏது?
காலம் கருதி, எதிரியின் வலிமை அறிந்து செய்யாவிட்டால் எதிலும் வெற்றி கிடைக்காது என்பது வள்ளுவர் வகுத்துக் கொடுத்திருக்கும் அரசியல் கோட்பாடு. எத்தனையோ சிக்கலான அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு கண்ட நமது மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த அடிப்படைகூட தெரியவில்லைபோலும்.
நாடு ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கப் போவதாக அறிவித்து எதிர்க்கட்சிகளிடமும், அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை இந்தப் பிரச்னை அம்பலப்படுத்தியிருக்கிறது. கட்சியும் அரசும் முரண்பாடாகப் பேசின. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட அரசால் திருப்திப்படுத்த முடியவில்லை.
ஒப்புக்குக் கூச்சலிடும் கூட்டணிக் கட்சிகளை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல் பின்வாங்க வேண்டியதாகிவிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத நிலையில், இப்படி அசட்டுத் துணிச்சலுடன் முடிவெடுப்பது தவறு என்று அரசு இப்போது உணர்ந்திருக்கும்.
பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத் தளங்களைக் கட்டுப்படுத்துவது பற்றி கபில் சிபல் பேசியிருக்கிறார். இதில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை என்றாலும், எந்த வகையான ஊடகத்தையும் சென்சார் செய்யப் போகிறேன் என்று கத்தியைத் தீட்டிக் கொண்டு கிளம்புவது அரசுக்கும் காங்கிரஸýக்கும் நல்லதல்ல. இருக்கிற மரியாதையும் நம்பகத்தன்மையும் போய்விடும். மக்களைக் கண்டு அரசு அஞ்சுகிறது என்று எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்வார்கள்.
இணையம் மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள் இந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்றோ மக்களிடம் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் என்று சில ஆண்டுகள் முன்புவரை யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. இணையத்தின் முகத்தையே இவை மாற்றியிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சி வெடிப்பதற்கும் ஆட்சி மாற்றங்கள் நடப்பதற்கும் பேஸ்புக் போன்ற இணையதளங்களே காரணம்.
எகிப்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி, ராணுவத்தின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்து நின்றார்களே, அவர்களுக்கு அத்தகைய துணிச்சலைக் கொடுத்தது யார்? இந்த சமூக வலைத்தளங்கள்தான். இவற்றால் சர்வாதிகாரிகளையே வீட்டுக்கு அனுப்ப முடிகிறது. உலகின் பெரும்பகுதி மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தந்திருக்கின்றன. நாடு, மதம், மொழி கடந்து அனைவருக்கும் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன.
அண்ணா ஹசாரே சிறையில் அடைக்கப்பட்டபோது பல்லாயிரக் கணக்கான மக்களின் உணர்வுகள் சமூக வலைத்தளங்களில் பிரதிபலித்தன. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கருத்துகள் கொட்டப்படுகின்றன. பொது வாழ்க்கையில் இருப்பவர்களைக் கண்காணிக்கவும், அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டவும் இவை பயன்படுகின்றன. எல்லையில்லா அதிகாரத்துடனும் விடுதலை உணர்வுடனும் ஊடகம் எடுத்திருக்கும் புதிய அவதாரம் இது. கபில் சிபல் கூறுவது போல சில சட்டங்களால் மட்டும் இந்தச் சுதந்திரத்துக்கு விலங்கிட்டுவிட முடியுமா என்ன?
அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகளில் வியப்பளிக்கும் வகையில் எதுவுமில்லை. மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை திரிணமூல் வீழ்த்தியிருக்கிறது.
ஒரிசாவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. பிகாரிலும் இதே நிலைதான். ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் சேர்ந்து லாலுவின் கட்சியை மீண்டுமொரு முறை தட்டிவைத்திருக்கின்றன.
கர்நாடக மாநிலம் பெல்லாரி தேர்தலிலும் எதிர்பார்த்த முடிவே வந்திருக்கிறது. பாஜகவின் வீழ்ச்சிக்கான தொடக்கம் இது என்று கூற முடியாது. ஆனால், அந்தக் கட்சிக்கு செல்வாக்கு சரிந்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது. காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக் கட்சிகளுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் சேதி.
ஹரியாணாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை இப்போதைக்கு அசைக்க முடியாது போலிருக்கிறது. இடைத் தேர்தல் முடிவுகள் அவரது செல்வாக்கை அதிகரித்திருப்பதால் மனிதர் கவலையில்லாமல் இருக்கிறார்.
இமாசலப் பிரதேசத்தில் ஒரு தொகுதி காங்கிரஸýக்கும் மற்றொன்று பாஜகவுக்கும் கிடைத்திருக்கின்றன. பாஜக ஆட்சியின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு இது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் புயலடிக்கிறது. நித்தம் ஏதாவது ஒரு பிரச்னை எழுப்பப்பட்டு அவைகள் முடக்கப்படுகின்றன. "அமைதியாக இருங்கள்', "இருக்கையில் அமருங்கள்' என்று சொல்லிச் சொல்லியே அவைத் தலைவர்கள் களைத்துப் போய்விடுகிறார்கள். அவை தொடங்கியதுமே மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிடுவதையே உறுப்பினர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் உறுப்பினர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
இதில் அவ்வப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதாவது ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என்பதை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது.
காங்கிரஸிலும் பாஜகவிலும் குழப்பங்கள் இருக்கின்றன என்று சாதாரணமாகச் சொல்லிவிடக்கூடாது. குழப்பங்களுக்கு மத்தியில்தான் கட்சிகள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டும். இந்தக் கட்சிகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் இல்லை. முன்பிருந்தது போன்ற கட்டுப்பாடும் இல்லை.
ஆளுக்கொரு திசை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரு தேசியக் கட்சிகளும் சோகை பீடித்துக் கிடப்பதால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வலுப்பெற்று வருகின்றன.
தேசியக் கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதற்கு உத்தரப் பிரதேசத் தேர்தல் வந்திருக்கிறது. இங்கு பகுஜன் சமாஜ் கட்சியை வெல்லும் வலிமை வேறு எந்தக் கட்சிக்கும் இருப்பது போலத் தெரியவில்லை.
ராகுல் காந்தியின் அதிரடிகளால் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக் கொள்வதுபோல கொஞ்சம் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் தேர்தல் ஓட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பிடிக்க முடியாது. சமாஜவாதியும் பாஜகவும் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.
சிறுபான்மை வாக்குகளை நம்பியே சமாஜவாதி கட்சி இருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி இதில் பெரும்பான்மை வாக்குகளை அள்ளிக் கொண்டு போய்விடும் எனத் தெரிகிறது. சிறுபான்மை வாக்கு வங்கியில் இருக்கும் உள்பிரிவுகளில் காங்கிரஸýம் அமைதிக் கட்சியும் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த உள்பிரிவுகள் என்னென்ன என்பதையெல்லாம் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள்.
பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கும் அவரது மகனுக்கும் நேரம் சரியில்லை போலிருக்கிறது. அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே அங்கு முன்னிலையில் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், செல்வாக்கு அதிகரிப்பது போலவே கட்சியில் கோஷ்டிகளும் பெருத்துவிட்டன. கோஷ்டிவாரியாக தேர்தலில் சீட் கொடுக்காவிட்டால், உள்ளடி வேலைகளைத் தடுக்க முடியாமல் போய்விடும். அகாலி தளத்துக்கு இந்தப் பிரச்னையில்லை. பிரகாஷ் சிங் பாதலின் மகனைக்கூட கட்சிக்காரர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பது அந்தக் கட்சிக்கு ஆறுதல்.
உத்தரகண்ட் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. கணித்துக் குறி சொல்லும் அளவுக்கு நிலைமை தெளிவாக இல்லை. திறமையானவராகவும் நேர்மையானவராகவும் கருதப்படும் முதல்வர் பி.சி.கந்தூரியை மாற்றும் எண்ணம் எதுவும் பாஜகவுக்கு இல்லை. அதே நேரத்தில் ஊழலை ஒழிப்போம் என்று ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் அந்தக் கட்சி, அதற்காக உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுவே அதிருப்தியாக மாறி தேர்தலில் எதிரொலிக்கக்கூடும். காங்கிரஸில் முதல்வர் பதவிக்குப் போட்டி அதிகம். நான்கைந்து பேர் இப்போதே வரிசையில் நிற்கிறார்கள்.
மணிப்பூர் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. கோவாவில் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் செய்வோருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்கப்போவதில்லை.
தேசியக் கட்சிகளான காங்கிரஸýம் பாஜகவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கட்டெறும்புகளாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அளவில் செல்வாக்குமிக்க தலைவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சொந்தத் திறமையாலும் பணிகளாலும் முன்னுக்கு வந்தவர்கள் இவர்கள்.
இவர்களது தலைமையை கட்சியில் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருவகையில் காங்கிரஸýக்குக் கூட இதுபோன்ற தலைமை இருக்கிறது என்று சொல்ல முடியும். ஆனால் பாஜகவுக்கு?
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி இவர்களில் யாராவது வரப்போகிறார்களா, இல்லை எல்லோரும் கேட்பது போல நரேந்திர மோடி வரப் போகிறாரா? இல்லாவிட்டால் அத்வானிக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமா?
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum