விழி பிதுங்க வைக்கும் பிரதமர் நாற்காலி
Page 1 of 1
விழி பிதுங்க வைக்கும் பிரதமர் நாற்காலி
நன்றி விகடன்
டெல்லி காங்கிரஸ் கட்சிக்குள் உச்ச கட்டப் பனிப் போர் நடக்கிறது.
2ஜி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலை உருளத்
தொடங்கிவிட்டது. 'அலைக்கற்றைக்கு விலை நிர்ணயித்ததில் சிதம்பரத்துக்கும்
பங்கு உண்டு!’ என்று சொல்லி சில ஆவணங்களை நீதிமன்றத்தின் முன்
வைத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிலையில், மத்திய நிதித் துறை
அமைச்சகத்தின் துணை இயக்குநரான பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் ஸ்பெக்ட்ரம்
ஃபைலில், 'ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி
இருந்தால், ஊழலே நடந்து இருக்காது' என்று குறிப்பிட்டு இருப்பது முக்கிய
ஆதாரமாக இவர்கள் கையில் இருக்கிறது. இதையே காரணமாக வைத்து சிதம்பரத்தை
ராஜினாமா செய்யச் சொல்லி பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராடி
வருகின்றன.
இந்த நிலவரம் குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம்
பேசியபோது, ''பிரதமர் பதவியைக் குறிவைத்து குழி பறிப்பு வேலைகள்
நடக்கின்றன. ராகுல் காந்தி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில்தான்
முன்னிலைப்படுத்தப்படுவார். அதன் பிறகு, எந்தத் தலைவராலும் முக்கியப்
பதவிகளுக்கு வரவே முடியாது. அதை உணர்ந்து, இப்போதே பிரதமர் நாற்காலியில்
உட்கார்ந்துவிட வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். எந்த நேரமும் தனது
பதவியை ராஜினாமா செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தயாராக இருக்கிறார். அப்படி
ஒரு சூழ்நிலை வந்தால், யார் பிரதமர் என்பதில்தான் போட்டி. ராஜீவ் காந்தி
காலத்தில் இருந்தே இன்னமும் பிரதமர் போட்டியில் இருக்கிறார் பிரணாப்
முகர்ஜி. இவருக்கென்று ஒரு லாபி செயல்படுகிறது. அனைத்துத் துறைகளிலும்
அவருக்காகப் புகுந்து விளையாடுகிறார் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது
படேல். ஆனால், பிரதமர் அலுவலகம், ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே. அந்தோணி
ஆகியோரின் துறைகளுக்குள் அகமது பட்டேலால் மூக்கை நுழைக்க முடியவில்லை. அந்த
அளவுக்கு அவர்கள் அகமது பட்டேலுக்கு செக்போஸ்ட் வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், சோனியாகாந்தி குடும்பம் சார்பில் பிரதமர் வேட்பாளராக
ப.சிதம்பரத்தை முன்னிறுத்த நினைக்கிறார்கள். அதனால் ப.சிதம்பரத்தை பிரதமர்
போட்டியில் இருந்து ஓரங்கட்டும் விதத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரை
சம்பந்தப்படுத்த சிலர் சதி செய்கிறார்கள். டெல்லியில் இப்போது இதுதான்
நடக்கிறது...'' என்றார்.
ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் தொகுதி எம்.பி-யுமான கே.எஸ்.அழகிரியிடம் இது குறித்துப் பேசினோம்.
''சீதையைப் போன்று சிதம்பரம் தூய்மையானவர். சோனியாவுக்கும் பிரதமர்
மன்மோகன் சிங்குக்கும் உற்ற துணையாக இருக்கிறார். சிதம்பரத்தைச்
சிதைத்தால், அவர்கள் இருவரையும் சிதைத்துவிடலாம் என ஒரு தரப்பு கருதுகிறது.
அமைச்சர் ப.சிதம்பரம் ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றால்,
பிரணாப் முகர்ஜியின் அறைக்குப் போய் ஆலோசனை நடத்திவிட்டு வருவார். அந்த
அளவுக்கு சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுப்பார். 2007-ல் வெளியுறவுத் துறை
அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். அப்போது, நிதி அமைச்சராக ப.சிதம்பரம்
இருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரம்கொண்ட
அமைச்சரவைக் குழுவின் தலைவர் பதவியில் பிரணாப் இருந்தார். ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு கொள்கையில் அதன் விலை மற்றும் அனுமதி வழங்குவது என்பதில் ஒளிவு
மறைவற்ற ஏல நடைமுறையைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் பின்பற்ற வேண்டும் என்று
பிரணாப் சொன்னார். அதை ப.சிதம்பரமும் ஏற்றுக்கொண்டார். ஆனால், தொலைத்
தொடர்புத் துறை அமைச்சகமோ, பழைய ஏல முறையைப் (பி.ஜே.பி. அரசு நடைமுறை)
பின்பற்றும்படி ட்ராய் சொன்ன கருத்தையே ஏற்றுக்கொள்ளப்போவதாக கொள்கை முடிவு
எடுத்துவிட்டது. இப்படித்தான், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் இருவரது
கருத்தையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு துறையின்
கொள்கை முடிவில் இன்னொரு துறை அமைச்சர் தலையிட இயலாது என்பதுதான் நடைமுறை.
இப்படி இருக்கும்போது, இப்போது சிதம்பரத்தை மட்டும் குற்றம் சாட்டுவதன்
மர்மம் புரியவில்லை. சிதம்பரத்தை இப்போது குற்றம் சொல்பவர்கள், விலை
நிர்ணயம் பற்றிய அமைச்சரவையின் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்த பிரணாப்
முகர்ஜி மீதும் குற்றம் சுமத்த வேண்டியதுதானே? யாராவது ஓர் அதிகாரி,
'பிரணாப் முகர்ஜி இன்னும் அழுத்தமாகத் தனது கருத்தைச் சொல்லி இருந்தால்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழலே நடந்திருக்காது’ என்று ஏதாவது ஒரு கோப்பில்
எழுதி இருந்தால், 'பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்' என்று
பி.ஜே.பி-யும் ஜெயலலிதாவும் கோரிக்கை வைப்பார்களா?
நிதித் துறையின் சாதாரண லெவலில் உள்ள ராவ் எழுதி இருப்பது, ஓர்
ஆலோசனைதான். அரசுக் கோப்பில் ஆலோசனை எழுதும் அதிகாரம் படைத்தவரா அந்த
அதிகாரி என்பதே கேள்விக்குறி. இவரின் ஆலோசனை என்பது நீதிமன்றம், விசாரணை
அமைப்புகளின் ஆலோசனை போன்ற தரம் உடையது என்று கருத முடியாது. ஏனென்றால்,
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.ஏ.ஜி., நீதிமன்றம், சி.பி.ஐ. போன்ற எந்த அமைப்பும்
ப.சிதம்பரத்தின் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக, 2ஜி அனுமதி
வழங்கப்பட்டதில் லஞ்சப் பணம் கை மாறி உள்ளதா? அதற்கான ஆதாரம் உள்ளதா
என்பதைப் பற்றித்தான் விசாரணை நடந்து வருகிறது...'' என்றவரிடம், ''தமிழக
முதல்வர் ஜெயலலிதாகூட ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை
வைக்கிறாரே?'' என்று கேட்டோம்.
''கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிற வேலையைத்தான் ஜெயலலிதா
செய்கிறார். பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கே
போகாமல் 10 வருடங்களாக இழுத்தடித்து வரும் அவர் சிதம்பரத்தைப்பற்றிக்
கூறுவது எந்த வகையில் நியாயமோ?'' என்றார்.
கவுன்சிலர் லெவலில் இருந்து பிரதமர் பதவி வரை நடக்கிறதே காங்கிரஸ் போராட்டம்!
நன்றி விகடன்
Similar topics
» அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!
» வருந்த வைக்கும் மருந்து!
» அஞ்சாநெஞ்சரை மதுரையில் ‘அஞ்ச வைக்கும்’ சில ஏற்பாடுகள்!
» வருந்த வைக்கும் மருந்து!
» அஞ்சாநெஞ்சரை மதுரையில் ‘அஞ்ச வைக்கும்’ சில ஏற்பாடுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum