அடம்பிடிக்காதீர்களேன்...
Page 1 of 1
அடம்பிடிக்காதீர்களேன்...
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படவுள்ள லோக்பால் மசோதாவில், அண்ணா ஹசாரே குழுவினர் சொன்னபடியே, லோக்பால் சட்டவரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தபோதிலும், சி.பி.ஐ. கொண்டுவரப்படவில்லை. அதேபோன்று, அரசுத் துறைகளில் பணிபுரியும் சி பிரிவு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று அண்ணா ஹசாரே குழுவினர் வலியுறுத்தினாலும், இந்த மசோதாவில் அவ்வாறு செய்யப்படவில்லை. மாறாக, ஏ, பி பிரிவு ஊழியர்கள் மட்டுமே லோக்பால் விசாரணை வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சி. டி பிரிவு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வழக்கம்போல லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிக்கும் என்பதுதான் அரசின் பதிலாக இருக்கிறது. இது நிர்வாகரீதியாகத் தேர்ந்த முடிவாகவே தெரிகிறது.
இவ்வாறு ஏன் செய்யப்பட்டது என்பதையும், எந்தெந்த காரணங்களால் அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகள் சில ஏற்கப்பட்டும், சில ஏற்கமுடியாமலும் போயின என்பதையும் மக்கள் மன்றத்தில் ஆளும்கட்சி விளக்கும்.
லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ-யைக் கொண்டுவரவில்லை என்றாலும்கூட, லோக்பால் உத்தரவிட்டால் அந்தக் குற்றம் தொடர்பான விசாரûணையை சி.பி.ஐ செய்தே ஆக வேண்டும். மேலும், அந்த விசாரணையைக் கண்காணிக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, அண்ணா ஹசாரே குழுவினர் வலியுறுத்தும் அடிப்படையான நோக்கம் சாதிக்கப்பட்டுவிட்டது என்றே உணர முடிகிறது.
ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த லோக்பால் தன்னிச்சையாக சிபிஐ-க்கு உத்தரவிட அதிகாரமில்லை என்பது ஒரு குறையாகத் தெரியவில்லை. லோக்பாலுக்கு ஒரு புகார் வருமேயானால் அதனடிப்படையில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு விசாரிக்கச் சொல்ல முடியும் என்கின்ற அதிகாரமே போதுமானது. ஒரு ஊழல் மிகப் பெரியதாக இருந்தால், ஒரு புகார் கொடுக்கக்கூடவா ஆளில்லாமல் போகப்போகிறார்கள்? ஆகவே, தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்பதற்காக இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
தாக்கல் செய்யப்படவுள்ள லோக்பால் மசோதாவில், வெளியுறவு, அணுசக்தி, தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை லோக்பால் விசாரிக்க முடியாது என்றிருப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை. இத்துறைகளில் அரசு மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளில் நிச்சயமாக லோக்பால் தலையிட முடியாது, கூடாது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், இந்தக் கொள்கை முடிவுகளின் பின்னால் ஊழல் இருக்குமேயானால், அது தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும்.
சிபிஐ தனித்து இயங்கினாலும், ஊழல் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட முடிவதைப்போல, மேற்சொன்ன துறைகளிலும் பிரதமர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது லஞ்சம் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த விசாரணையை எவ்வளவு ரகசியமாக வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், விசாரணை நடத்தும் அதிகாரம் லோக்பாலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நாட்டின் மிகப்பெரும் ஊழல்கள் மேற்சொன்ன மூன்று துறைகள் சார்ந்தவைதான். கருப்புப் பண முதலீடும் அது தொடர்பான தகவல் பரிமாற்றமும் வெளியுறவுத்துறை சார்ந்தவை. ஆயுதக் கொள்முதல் அல்லது ஏவுகணைகள் விற்பனை போன்றன பாதுகாப்புத் துறைக்கு உரியவை. தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான செயற்கைக்கோள் விண்வெளித் துறை சார்ந்தது. கொள்கை முடிவுகள் வேறு, செயல்பாடு வேறு. கொள்கை முடிவுகளில் லோக்பால் தலையிட முடியாது. ஆனால் செயல்பாட்டில் ஊழல் இருந்தால் அதை ஏன் லோக்பால் தட்டிக்கேட்கக் கூடாது?
லோக்பால் உறுப்பினர்களை நீக்க வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் ஒன்றாகக் கோரிக்கை விடுத்தால் போதும் என்பது சரியல்ல. ஊழல் புகார் என்பது 99 விழுக்காடு, ஆளும்கட்சி மீதானதாகத்தான் இருக்கும். இந்தியாவில் ஆளும்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு, அது பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்தில் ஆட்சி நடத்தினாலும்கூட, குறைந்தபட்சம் 150 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும். அதனால் ஆளும்கட்சி எம்.பி.க்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத உறுப்பினர்களை நீக்கிவிடுவது மிக மிக எளிது. இந்த நிபந்தனையில் மாற்றம் தேவை.
இந்த நிபந்தனை ஆளும்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்த எம்.பி.க்கள் 50 பேரும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் 50 பேரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே ஒரு லோக்பால் உறுப்பினரை நீக்க முடியும் என்பதாக மாற்றப்பட வேண்டும்.
தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதாவை ஒரேயடியாக எதிர்ப்பதைக் கைவிட்டு, இத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்வதில் அண்ணா ஹசாரே குழுவினர் ஆர்வம் காட்டினால் பயனுள்ளதாக அமையும்.
வானளாவிய அதிகாரமுள்ள லோக்பால் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இப்போது இருப்பதைவிடப் பல மடங்கு அதிக ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் உள்ள லோக்பாலில்போய் முடிந்துவிடக் கூடும்.
மேல்மட்ட "மெகா' ஊழல்களை முதலில் கட்டுப்படுத்த வழி தேடுவோம். நல்லவர்கள் தலைமையில் அமர்ந்துவிட்டால், கீழ்மட்ட ஊழல்கள் கட்டுக்குள் வந்துவிடும். இன்றைய தேவை சக்திவாய்ந்த லோக்பால். அது தொடக்கமே தவிர, முடிவல்ல என்பதை அண்ணா ஹசாரே குழுவினர் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum