அன்னியன் வந்து புகல் என்ன நீதி?
Page 1 of 1
அன்னியன் வந்து புகல் என்ன நீதி?
இந்திய யூனியன்', எல்லைப் பாதுகாப்பில் "ராணுவம்', காய்கறி "ஏற்றுமதி', "தமிழ் அகதிகள் வருகை' என்று எல்லாம் வெளியாகும் விவரணைகள். இனி அந்தந்த மாநிலங்களின் விசா வாங்கித்தான் பயணம் செய்ய வேண்டும்போல. யு.எஸ்.ஐ (ஐ.எஸ்.ஐ அல்ல!) என்ற பெயரில் எதிர்காலத்தில் "யுனெட்டைட் ஸ்டேட்ஸ் ஆஃப் இண்டியா' என்ற "இந்திய ஐக்கிய நாடுகள்' உருவாகுமோ என்னவோ.
இப்போதைக்குப் பேரணிகள் பலவும் போரணிகள் ஆகிவிட்டன. சந்தடிச்சாக்கில் காலை பிரியாணிப் பொட்டலங்களை விழுங்கிவிட்டு மதியம் வரை தொடரும் உண்ணாவிரதங்களும் அமைதியாக நடக்கின்றன.
ஏதாயினும், நாட்டின் பாதுகாப்புக்கு "உலை வைக்கவும்', மாநில நல்லிணக்கத்தை "உடைக்கவும்' கிளர்ந்த அசம்பாவிதங்கள் தேவை அற்றவை. கூர்ந்து பார்த்தால் அணுவோ, அணையோ, பின்னணியில் "சுதேச பக்தர்கள்' கைங்கர்யம் புரியும்.
ஒருவர் அமெரிக்க டாலர்களில் தவம் கிடந்தபடி ஜப்பான் கொல்லைப்புறக் கழிவுகளையே வேடிக்கை பார்த்ததால் வந்த எதிர்வினை? இன்னொருவர் அரேபிய ரியால் வானில் பறந்தபோது, சீனாவில் அணை உடைந்ததாகத் திடுக்கிட்டு கண்விழித்ததால் எடுத்த திகில் படம். மேலை உப்பரிகையில் அமர்ந்து கீழை நாடுகளைப் பார்த்து ஞானோதயம் பெற்ற பாக்கியசாலிகள். நடுவில் நாம் மாட்டிக்கொண்டோம்.
இனி ஒரு விதி செய்வோம். பள்ளிக்கூடங்களில் வாரம் மூன்று வகுப்புகளாவது பழையபடி "நீதி போதனை' பாடம் நடத்த வேண்டும். பள்ளிப் பருவத்தில் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும். பிஞ்சுப் பிராயத்தில் பிள்ளைகளை ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில், ஆபாசப் பாட்டு நடனங்களில் பெற்றோரே அனுமதிப்பானேன்?
""ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா, அப்பா, ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். நல்ல குணமான வாழ்வு வேண்டுமென்றால் இவர்களால் தான் ஊட்ட முடியும்.
மூவரும் சேர்ந்து பதினைந்து வயதுக்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால் பிறகு கடவுளோ, பிசாசோ எந்த அரசுச் சட்டமோ அவர்களை மாற்ற முடியாது. என்னுடைய அனுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன்'' என்பார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
ஏற்கெனவே மேனாட்டு முன்னேற்றத்துக்காக நம் பிள்ளைகளை "ஈமு' கோழிகள் மாதிரி பணத்துக்காக வளர்த்து ஆளாக்கி விட்டோம். அன்னிய வங்கிகளில் கணக்குத் தொடங்குவதற்கு ஆள்பிடிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேனாட்டுப் பாணியில் திருமணத்துக்கு முன்னமேயே "இணைந்து வாழ'வும் கற்றுக் கொண்டார்கள்.
காற்றுவாக்கில் ""காதலிக்கச் சொல்லுடி பிள்ளையெ காதலிக்கச் சொல்லுடி'' என்று நம்மவர்க்கு உபதேசம் வேறு. அவர்கள் இன்றைக்கும் ஆங்கிலத்தில் யோசித்துத்தான் தமிழில் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். "இட்' - அது, "பட்' - ஆனால், "வாட் மீனிங்' - என்ன அர்த்தம்? அதையே முக்கி முனகிப் பாடி "ஆஸ்கார்' விருதுக்கும் போட்டி போடுகிறார்கள்.
இதற்கு மத்தியில் அன்னியன் வருகை வேறு, அன்னிய முதலீடு வேறு என்று எல்லாம் விஷம வியாக்கியானங்கள். கணக்கில் காட்டாத கருப்புப் பணமே அன்னிய முதலீடு என்ற வெள்ளைப் போர்வையில் புழக்கடை வழி இங்கு நுழையக்கூடும்.
அமெரிக்கப் பதிவுரிமம் பெறாத பாஸ்மதி, மஞ்சள், வேப்பிலை அனைத்து உள்ளூர் சரக்குகளையும் விவசாயிகள் பரிதாபமாக இந்திய முதலாளிகளின் அன்னிய முகவர்களுக்குத் தானமாக வழங்க நேரும்.
அதிலும் வேறு சில சிக்கல்கள். ஏற்கெனவே கல் உப்பினை உப்பளத்தில் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி "டாடா' காட்டியவர் கதை நாடறியும்.
இன்றைக்கு மஞ்சள் பொடியில் "அனிலின்', பட்டாணியில் "மெலாச்சைட் பச்சை', பெருங்காயத்தில் பிசின், மிளகாய்த் தூளில் செங்கல் பொடி, பிஸ்கட்டில் பன்றிக் கொழுப்பு, குறுமிளகில் உலர் பப்பாளி விதை என்று உள்ளூர்க் கலப்படம் தனிக்கதை. அவரவர் உணவுப் பழக்கம், உடல்வாகு, நோயெதிர்ப்புத் திறன் சார்ந்து புற்றுநோய், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, கல்லீரல் பிரச்னைகள் என்று ஏதோ வந்தும் போயும் இருக்கிறது. உயிர் வாழ்கிறோம்.
அன்னியக் கலாசார உணவு வகை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நுழைந்தால் அவ்வளவுதான். குழந்தைகளுக்கான சாக்லேட்டு என்ற விஷ உருண்டையிலும், புத்துணர்ச்சி ஊட்டும் கொக்கோவிலும் மாரடைப்புக் காரணி "தியோபுரோமின்' என்ற பெயரில் பவ்வியமாக ஒளிந்து இருக்கிறது. அதிலும் "ட்ரிப்டோஃபான்', காஃபீன் எல்லாமே அளவு குறைந்த நச்சுகள்.
சருமத்தின் மினுமினுப்புக்குப் பூசும் களிம்பில் மினரல் எண்ணெய், கொல்லாஜன் ஆகியவற்றால் வியர்வைத் துவாரங்கள் அடைபடும். தோல் அழற்சி உண்டாகும்.
சில உதட்டுச் சாயங்களில் உள்ள அக்டோ மற்றும் டெக்கா மீத்தைல் - சைக்ளோ - டைட்ரா - சிலாக்சேன்கள், நகச் சாயத்தின் டைபியூட்டைல் தாலேட்டு ஆகிய வேதிமங்களால் கர்ப்பப் பையில் கோளாறுகள் உண்டாகலாம்.
அக்குளில் வியர்வை மணம் போக்கத் தெளிக்கும் பூச்சி மருந்தில் "பாராபென்' ரக வேதிமம் அடக்கம். இது மார்பகப் புற்றுக்குப் பால் வார்க்கும்.
தரை கழுவும் திரவத்தில் அடங்கிய சோடியம் லாரைல் சல்பேட்டு உங்கள் பற்பசையிலும் உள்ளது என்றால் இனி வாய் கொப்பளிப்பீர்களா? வேறு ஒன்றுமில்லை, இது நுரையீரல், மூளையைப் பாதிக்கும் என்று சொன்னால் மறுப்பீர்களா?
குடியே குடிகாரர் கண்ணை மறைக்கும். அதிலும் கலப்படச் சாராயத்தின் மீத்தைல் ஆல்கஹால் குடிகாரர் கண்ணையே பறிக்கும்.
இத்தனை வில்லங்கம் இருக்கும்போது அன்னியர் முதலீட்டில் இங்கு வந்து சில்லறைத்தனம் பண்ண மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வழக்கு என்று வந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அன்னிய நிறுவனக் கோடீஸ்வரரை அரசு செலவில் தனி விமானத்தில் வழி அனுப்பி விடுவோம். இல்லை, சிறுமி கிழவியான பிறகு, அவள் கல்யாணத் தாலிச் செலவாக நஷ்ட ஈடு பெற்றுத் தருவோம்.
வீடோ, நாடோ அயலானை நேசிப்போம். ஆனால், வேலியை மட்டும் அகற்றிவிடக் கூடாதே. அதுதான் புத்திசாலித்தனம். விளைச்சலைப் பெருக்கி வை. நாங்கள் வந்து விற்றுத் தருகிறோம் என்பார்கள். பிள்ளையைப் பெற்று வை. நாங்கள் வந்து வாழ்ந்து காட்டுகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.
இதில் இன்னொரு விபரீதம். இங்கு போராட்டங்களில் புரளும் அன்னிய முதலீடு வெறும் கணக்கில் காட்டாத கருப்புப் பணமும் அல்ல, சிகப்புப் பணம். தேசப் பாதுகாப்பில் ரத்தக்கறை ஊட்டும் வெளிநாட்டுப் பணம்.
இல்லையென்றால், அடுப்படியில் உலையில் போட்ட அரிசியைக் கொதிக்க வைத்ததும், "போதும் உலையை இறக்கிவிடு' என்று பாதியில் சொல்வார்களா, அரைவேக்காடு ஆவது எது? பாருங்களேன், தையல்காரனிடம் துணியைத் தந்து ஆயிற்று. குறித்த தேதியில் சட்டை தயாரா என்று அல்லவா பார்க்க வேண்டும்? அவர் கையை வெட்டினால் என்ன, பையை வெட்டினால் என்ன? அதைவிடுத்து, கடை வாசலில் நின்று, ""அய்யய்யோ என் புதுத் துணியை வெட்டுறானே'' என்று ஏன் இந்தக் கூப்பாடு?
கடலோரம் கல்பாக்கத்தில் மின்சாரம் எடுப்பதற்கே இந்தப் பாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் யாருக்கு வந்த விருந்தோ என்று காதலி இதழோரம் கோடம்பாக்கத்தில் மின்சாரம் எடுக்க தம்பிடித்துப் பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அடுத்த "பத்ம விருது'க்குப் பரிந்துரைக்கலாம். போகட்டும்.
அந்நாளில் அரேபியர்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் கொண்டு இருந்த வர்த்தகத் தொடர்புகள் பற்றி அறிவோம். அவர்கள் இத்தாலிய வணிகர்களுக்கு இந்தியச் செல்வங்களை வழங்கி வந்தது வரலாறு. அப்படியானால் இடையில் எதற்கு அரேபியத் தரகு? இந்தியாவுடன் நேரடி அன்னிய முதலீடு செய்யலாமே என்றுதான் இங்கு குடியேறினர் ஐரோப்பியர்கள்.
அவர்களில் முதலில் வந்தவர் வாஸ்கோட காமா. 1497-ம் ஆண்டு. அவரது வருகை குறித்து இந்திய மன்னர்களிடம் இங்கு இருந்த அரேபிய வணிகர்கள் கோள்மூட்டினராம். கரையேறிய போர்த்துக்கீசிய மாலுமிகள் சிலர் இங்கு கைதாயினர்.
ஆனால், கப்பலைப் பார்வையிடச் சென்ற இந்தியப் பிரபுக்களை அவர்கள் பிடித்துவைத்துக் கொண்டனர். தங்கள் மாலுமிகளை விடுதலை செய்தால் தான் இந்தியப் பிரபுக்களை விடுவிப்போம் என்று மிரட்டினார்கள். வேறு வழி?
வழக்கம்போல நாம் பேரம் பேசினோம். அதுதான் இன்று வரைக்கும் அவர்களோடு வாய் வலிக்காமல் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
நன்றி தினமணி
Similar topics
» கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?
» மாற்றுவழிதான் என்ன?
» என்ன காரணம்?
» திவாலாக காரணம் என்ன?
» கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?
» மாற்றுவழிதான் என்ன?
» என்ன காரணம்?
» திவாலாக காரணம் என்ன?
» கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum