போலீஸ்காரரின் வாழ்க்கையை தொலைத்த குடி!
Page 1 of 1
போலீஸ்காரரின் வாழ்க்கையை தொலைத்த குடி!
குடித்துவிட்டு அப்பாவி ஒருவரை அடித்த குற்றத்துக்காக தற்போது தனது வேலையை தொலைத்துள்ளார் திண்டுக்கல்லை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர். குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப குடி போலீஸ்காரரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டது. இப்படிப்பட்ட குடிகார போலீஸ்காரருக்கு நீதிமன்றம் கொடுத்த சாட்டையடியை வரவேற்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், வீருவேடு போலீஸ் நிலையத்தில் 1ஆம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் கே.செல்லையா. கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பணிக்கு செல்லாமல் இருந்ததோடு குடிபோதையில் கள்ளிமந்தையம் பஸ் நிலையத்தில் ஒரு அப்பாவியை அடித்து உதைத்துள்ளார்.
ஆனால் அந்த அப்பாவி மனிதர் தம்மை அடித்து உதைத்த குடிகார போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் செய்தார். குற்றம் செய்தவர் போலீஸ்காரர் என்பதால் காவல்துறை விசாரணையில் மந்தம் காட்டாமல் உடனடியாக இறங்கியது.
உதை வாங்கியவர், இதை பார்த்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்திய பின்னர், குடிகார போலீஸ்காரர் ஒரு அப்பாவியை அடித்து உதைத்தது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து போலீஸ்காரர் செல்லையா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஆனால் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் செல்லையா. ''உதைபட்டதாக கூறப்படுபவரைத்தவிர, மற்ற 2 சாட்சிகளும் முரண் சாட்சி அளித்தனர். அந்த ஒருவரது சாட்சியை மட்டும் வைத்துக்கொண்டு என்னை டிஸ்மிஸ் செய்துவிட்டனர். எனவே என்னை டிஸ்மிஸ் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று மனுவில் கூறியிருந்தார் குடிகார போலீஸ்காரர் செல்லையா.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், அப்பாவி மனிதரை குடிகார போலீஸ்காரர் அடித்தது உண்மைதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை டிஸ்மிஸ் செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி அளித்த தீர்ப்பில், ''இந்த வழக்கில் மற்ற சாட்சிகள் முரணாக சாட்சி அளித்தாலும், பாதிக்கப்பட்ட நபர் மட்டும் குற்றச்சாற்றுக்கு சாதகமாக சாட்சி அளித்துள்ளார். குற்றச்சாற்றை நிரூபிக்க ஒரு சாட்சி போதுமானது. அதனடிப்படையில் துறை ரீதியான விசாரணையில் முடிவு எடுப்பது தவறல்ல. எனவே மனுதாரர் ஒருவரை அடித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரி, மனுதாரரை டிஸ்மிஸ் செய்ய எடுத்த முடிவு சரிதான். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மனுதாரருக்கு பெருந்தன்மை காட்ட முடியாது என்று அரசு கூறியுள்ளது. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
தமிழகத்தில் போலீஸ்காரர்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் போதையில் குடித்துவிட்டு சாலையில் கிடந்த காவலர் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அழைத்து செல்ல முயன்றபோது அவரை குடிபோதையில் இருந்த காவலர் தாக்கியது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. (மேலே உள்ள படமே இதற்கு சாட்சி).
இப்படிப்பட்ட குடிகார போலீஸ்காரர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் முதல் தண்டனை சஸ்பெண்ட். அதுதான் அவர்களுக்கு அரசு காலம் காலமாக கொடுத்து வந்தது. இப்போதுதான் சஸ்பெண்ட் என்ற நிலை மாறி டிஸ்மிஸ் என்ற அளவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு மற்ற குடிகார போலீஸ்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
நன்றி வெப்துனியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum