சில்லறை வர்த்தகத்தில் 100% அரசியல்
Page 1 of 1
சில்லறை வர்த்தகத்தில் 100% அரசியல்
விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, லோக்பால் மசோதா, ஊழல், கறுப்புப் பணப் பிரச்னை, வழக்கமான வாக்குவங்கி அரசியல் ஆகியவற்றுடன் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரமும் சேர்ந்து இப்போது அரசியல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிப்பது நம் நாட்டுக்கு ஏற்றதா? அதுவும் வளர்ந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த முடிவு அவசியமா என்பன போன்ற கேள்விகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
உலகத்தின் பொருளாதார நிலைமை இப்போது திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளேகூட பொருளாதாரப் பிரச்னைகளைச் சமாளிக்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் பொருளாதாரம் அபாய நிலையைத் தாண்டிவிட்டது. பிரிக் என்று சொல்லக்கூடிய பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில்தான் நிலைமை பரவாயில்லை. ஆனாலும் இந்தியாவிலும் சீனாவிலும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இருப்பதைக் காண முடிகிறது.
நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் 7 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இன்னும் கீழே போகக்கூடும் என்றே அறிகுறிகள் சொல்கின்றன. இன்னொருபக்கம், வர்த்தகப் பற்றாக்குறையும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு உகந்ததல்ல. பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நேரமிது.
சர்ச்சைக்குரிய ஒரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்க வேண்டும். நேரம் பார்த்துச் செயலாற்றுவதுதான் அரசியலில் மிக முக்கியம். சில்லறை வர்த்தகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்கிற முடிவு ஒவ்வொரு நிலையிலும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டது. அதனால் அவசரகதியில் இதை அமல்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மாற்றங்கள் அவசியம் என்பதையும் மறுக்க முடியாது.
இப்போதைய சில்லறை வர்த்தகச் சந்தை முன்போல இல்லை. எல்லா மெட்ரோ நகரங்களிலும் பிக் பஜார் போன்ற பெரிய நிறுவனங்கள் கடைவிரித்திருக்கின்றன. சிறிய நகரங்களில்கூட இதுபோன்ற சூப்பர் மார்க்கெட்டுகளைப் பார்க்கலாம். இவற்றுக்கிடையே சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களும் வியாபாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருதரப்பினரும் சேர்ந்தே பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னைக் கேட்டால், இதுபோன்ற சமநிலை நிலவுவதற்கு அனுமதிக்க வேண்டும், சந்தையை அதன் போக்கில்விட வேண்டும் என்றுதான் சொல்வேன். அதே நேரத்தில், சில்லறை வர்த்தகத்தில் நுழைந்திருக்கும் நம்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே, வெளிநாட்டு நிறுவனங்களும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்த விவகாரத்தில் விவாதம் கண்டிப்பாக அவசியம். அதன் தொடக்கம்தான் இந்தச் சர்ச்சை. திரிணமூல் காங்கிரஸ், திமுக போன்ற அரசின் கூட்டணிக் கட்சிகளோ, பாஜக, இடதுசாரி, பகுஜன், சமாஜவாதி, தெலுங்குதேசம், அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு எதிராக நிற்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அரசு ஒருபுறமும் மற்ற அனைவரும் மற்றொருபுறமும் நின்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "சாம் மாமா' என்று சொல்வார்களே, அந்த அமெரிக்க அரசிடமிருந்து நெருக்கடி வந்ததால்தான் அரசு இப்படி அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது என்கிற வழக்கமான பேச்சும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கோக்கும், பெப்சியும் நம்நாட்டுக்கு வந்தபோது, மக்களிடமும் வணிகர்கள் மத்தியிலும் முதலில் அச்சம் நிலவியது நினைவிருக்கலாம். ஆனால், இப்போது நிலை என்ன? கோக்கும் பெப்சியும் இல்லாத பெட்டிக் கடைகளே கிடையாது. உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் வழுவழு பாக்கெட்டுகளாக கிராமப்புறங்களில் கூடக் கிடைக்கிறது. வணிகர்கள் வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
நான் இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை. அரசியல் நிர்பந்தங்களும் எனக்குக் கிடையாது. அதனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை நான் ஆதரிக்கிறேன் என்பதை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். அதேநேரத்தில் அரசு கூறுவதுபோல 51 சதவிகிதம்வரை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யவிடக்கூடாது. அதிகபட்சம் 26 சதவிகிதம்வரை முதலீடு செய்யலாம் என்கிற கட்டுப்பாடு அவசியம். நிபுணர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு விஷயத்தை எடுத்துச்சொல்லி புரிய வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தால் மட்டும் மக்கள் நம்பிவிட மாட்டார்கள். சாமான்யர்களையும், சிறுவணிகர்களையும் பாதுகாப்பதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அனைத்துத் தளங்களிலும் தெளிவுபடுத்துவது அவசியம். அதைச் செய்யாதவரை சர்ச்சைகளும் தொடரத்தான் செய்யும்.
தேர்தல் ஆணையத்துக்கு ஓய்வே கிடையாது. எப்போதும் ஏதாவது தேர்தலை நடத்திக் கொண்டேயிருப்பார்கள். மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, கர்நாடகம், இமாசலப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இப்போது இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4-ம் தேதி) முடிவு தெரிந்துவிடும். இந்த முடிவுகளை வைத்து ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் வழக்கமான பல்லவியைப் பாடுவார்கள். அடுத்த தேர்தல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று ஆரூடம் கூறுவார்கள்.
ஆனால் எனக்கென்னவோ, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த ஆச்சரியமோ அதிர்ச்சியோ இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. அண்மைக் காலங்களில் பேரிழப்புகளைச் சந்தித்திருக்கும் பாஜக, இந்தத் தொகுதியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துமா என்பதுதான் ஆவலுக்கு காரணம்.
ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டம் பற்றி ஃபரூக் அப்துல்லாவும் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதை அவர்கள் அரசியல் கோணத்தில் பார்க்கிறார்கள் என்பது அவர்களது கருத்துகளில் இருந்தே தெரிகிறது. நீண்டகாலமாக ராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டிருப்பது நல்லதல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் ராணுவத்தின் நிலைப்பாடே மிகச் சரி என எனக்குப்படுகிறது.
பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவிவருகிறது. ஆளாளுக்கு அதிபர் போல செயல்பட்டு வருகிறார்கள். அதிகார மையங்கள் பெருகிவிட்ட நேரத்தில், நமது எல்லைகளை நாம் விழிப்புடன் காக்க வேண்டியது முக்கியம். ராணுவம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கட்டும். உண்மை நிலையை உணர்ந்து, ராணுவத்தை ஆதரிக்க வேண்டியதுதான் மத்திய அரசின் தலையாயப் பொறுப்பாகும்.
பாகிஸ்தானில் நேட்டோ படைகள் புகுந்து 24 ராணுவ வீரர்களைக் கொன்றிருக்கிறது. இது எதிர்பாராத சம்பவம் என்று கூறப்பட்டாலும், பாகிஸ்தானும், அதன் ராணுவமும் அதிருப்தியடைந்திருக்கின்றன. இதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லையே தவிர, பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.
பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகள், அரசியல் சச்சரவுகள் போன்றவை இருந்தாலும், உள்நாட்டுப் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம்கொடுத்துவிடக்கூடாது. நமது உள்துறை அமைச்சர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதனால்தானோ என்னவோ, ஜெர்மன் பேக்கரி, ஜும்மா மசூதி, சின்னசாமி மைதானம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. இவர்களிடமிருந்து பல்வேறு மதிப்புமிக்க தகவல்கள் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் பயங்கரவாத முகாம்கள் மறைமுகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன, வருங்காலத்தில் என்னென்ன தாக்குதல்கள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பவை போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். நாட்டுக்குள் பதுங்கியிருக்கும் மேலும் பல பயங்கரவாதிகளைப் பிடிக்கவும் முடியும்.
முன் எப்போதும் இருந்ததைவிட பயங்கரவாதிகள் இப்போது வலுவாக இருக்கின்றனர். அவர்களது கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரு இடத்தைக் கண்டுபிடித்து அழித்தால், வேறு இடத்தில் பதுங்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு வழி இருக்கிறது. புகலிடம் அளிக்கவும் ஆள்கள் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்திவரும் நமது பாதுகாப்புப் படையினர் பாராட்டுக்குரியவர்கள்.
மாவோயிஸ்டுகளுக்கு சமாதானக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அளவுக்கு அதிகமாகவே கீழிறங்கிவிட்டார், மென்மையாக நடந்து கொள்கிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அவரது அணுகுமுறைதான் சரி. பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் அதேநேரத்தில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவரது அரசு தயங்காது என்பதற்கு துப்பாக்கிச் சண்டையில் கிஷண்ஜி கொல்லப்பட்டதே சாட்சி. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் மாவோயிஸ்டுகள் இறங்குவார்கள். இதனால், இருபுறமும் உயிரிழப்புகள் தொடர்கதையாகும் என்பது வருத்தமளிக்கும் விஷயம்.
மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பத்துடிக்கும் பலர் இருக்கிறார்கள். பல நிர்பந்தங்களால் அவர்கள் ஆயுதத்தைக் கீழே போட முடியவில்லை. அவர்களைக் கண்டறிந்து, பாதுகாப்பும் மறுவாழ்வு உறுதிகளும் அளிக்க அரசு முனைப்புடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போலீஸôரோ மாவோயிஸ்டுகளோ யாரும் சண்டையையும் உயிரிழப்புகளையும் விரும்புவதில்லை என்பதுதான் மறுக்க இயலாத உண்மை.
நன்றி தினமணி
Similar topics
» மொத்தமாய் விலைபேசப்படும் சில்லறை வியாபாரம்!
» குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?
» குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum