மக்கள்தொகை: தடுமாறும் பொருளாதாரம்
Page 1 of 1
மக்கள்தொகை: தடுமாறும் பொருளாதாரம்
உலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்துள்ளது. இது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய தருணமிது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையொட்டி நாம் மகிழ்கிறோம், பெரும் விழா கொண்டாடுகிறோம். நம்நாடு பெரும்பாலான துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதைப்பற்றி நாம் பெருமைகொள்வது இயல்பு. ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம். இதனால் நமது நாடு வறுமையின் பிடியிலிருந்து மீள முடியாத நிலையில் தொடர்ந்து உள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 136 கோடியாக உயர்ந்துவிட்டது. இப்போது உலகின் மக்கள்தொகை ஆண்டுக்கு 10 கோடி என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 750 கோடியாக அதிகரிக்கும். இதே எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 1050 கோடியாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உலகில் இப்போது ஆண்டுக்கு சராசரி மக்கள் பெருக்க விகிதம் 1.57 சதவிகிதமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் 2 சதவிகிதமாக உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 0.4 சதவிகிதமாக உள்ளது.
மக்கள்தொகைப் பெருக்கம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் தேவை அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பொருள் உற்பத்தி இல்லையெனில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். அவற்றின் விலைகள் கடுமையாக அதிகரிப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 33 லட்சம் சதுர கிலோமீட்டர். மேற்கு ஐரோப்பாவின் பரப்பு இதற்கு சமமானதாகும். ஆனால், மேற்கு ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகை எவ்வளவோ அதைப்போல மூன்று மடங்கு மக்கள்தொகை நம் நாட்டில் உள்ளது. 1986-ல் நமது நாட்டில் ஒவ்வொரு நபருக்கு 0.90 ஹெக்டேர் நிலப்பரப்பு இருந்தது. இது 2010-ம் ஆண்டில் 0.20 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
மக்கள்தொகை பெருகிவரும் வேகத்தைவிட நகரங்கள் பெருகிவரும் வேகம் அதிகமாக உள்ளது. கிராமங்கள் வெகு வேகமாக சிறு நகரங்களாகவும், பெரும் நகரங்கள் மெகா நகரங்களாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றன.
இப்போது உள்ள 700 கோடி மக்கள்தொகையில் 300 கோடி பேர்தான் நகரங்களில் வசிக்கின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் இது 400 கோடியாக உயரும். 2025-ம் ஆண்டில் நகர்ப் பகுதிகளில் குடியேறும் மக்கள் எண்ணிக்கை 600 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மக்கள்தொகைப் பெருக்கம் 1.57 சதவிகிதமாக இருக்கும்போது நகர்ப்பகுதிகளில் 2.75 சதவிகிதமாக உயரும். 1950-ல் உலகில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரே நகரமாக நியூயார்க் விளங்கியது. இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உலக நகரங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துவிட்டது. டோக்கியோ நகரின் மக்கள்தொகை 3.5 கோடியாகும். வரும்காலங்களில் 10 கோடி மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மேலும் உருவாகலாம்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் 1985-ம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. 2010-ல் இது 25 ஆக உயர்ந்துவிட்டது.
நகரங்களில் மக்கள்தொகை பெருக முக்கியக் காரணமே தொழிற்சாலைப் பெருக்கமாகும். இவற்றில் பணிபுரிய கிராமப்பகுதிகளிலிருந்து மக்கள் குடிபெயர்வதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் கிராமப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் 80 சதவிகித தொழிற்சாலைகள் நகர்ப்பகுதிகளில்தான் உள்ளன.
நகர்ப்பகுதிகளில் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்பு வசதிகள் பெருகவில்லை. இதனால் கிராமப்பகுதிகளிலிருந்து குடிபெயரும் மக்களுக்கு வீடு கிடைக்காமல் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் 36 சதவிகிதம் பேர் நகர்ப்பகுதிகளில் குடிசைகளில் வசிக்கின்றனர். குடிசைகளில் குளிக்க, துவைக்க, குழந்தைகளை வளர்க்க, தூங்க இடவசதி கிடையாது. இதனால் குடிசைவாசிகள் நகர்ப்பகுதி நடைபாதைகள், பாலங்களின் அடிப்பகுதி, காலி குழாய்களில், சாலையோர நடைபாதைகளில் வசிப்பதாக ஐஎல்ஓ எனப்படும் உலக தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்விதம் சாலையோரம் மற்றும் குடிசைகளில் வசிக்கும் மக்கள் மாசுபடிந்த காற்றைச் சுவாசிப்பதால் சுவாச நோய்க்கு பெரிதும் ஆளாகின்றனர். ஓய்வு நேரத்தைப் போக்க சரியான வசதி இல்லாததால் குடி மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் மிகக் குறைந்த அளவுக்குத்தான் மரங்கள் உள்ளன. மெட்ரோ ரயில், மோனோ ரயில் என நகரம் விரிவடையும்போது நகரங்களைச் சுற்றிய பசுமை வயல்கள், தோப்புகள், ஏரிகள், குளங்கள் அழிந்து போகின்றன. இத்தகைய அசுரவேக வளர்ச்சி இருக்கும்போது நகர்ப்புற மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த நாடாயினும் மக்கள்தொகை பெருகப் பெருக அந்நாட்டின் வளர்ச்சி தடைப்படும். மக்கள்தொகைப் பெருக்கம் அந்த நாட்டை சுபிட்ச பாதைக்குக் கொண்டு செல்லாது. அனைத்துத் துறைகளிலும் முன்னேறிச் செல்லும்போது மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கவனிக்காவிட்டால் நாடு முன்னேற்றமடையாது.
இன்னும் சில ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தில் முதலிடத்தில் உள்ள சீனாவை இந்தியா விஞ்சிவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கை எடுக்காவிடில், நம்நாடு வல்லரசாக உருவாகுவது சாத்தியமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum