முட்டுக்கட்டை போடாதீர்கள்!
Page 1 of 1
முட்டுக்கட்டை போடாதீர்கள்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள "லோக்பால்' சட்டவரைவு மசோதா இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் என்ன குறைகள் இருக்கின்றன என்பதைப் பொதுவாகச் சொல்ல முடியாது. இருப்பினும், இந்த வரைவு மசோதா தயாரிப்பில் ஈடுபட்டவர்களின் கூற்றுப்படி, இதில் பிரதமரும், நீதித்துறையும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கு மேலாக நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள் மட்டுமே இந்த வரைவு லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதுடன், அரசு நிதியுதவியைப் பெறும் தன்னார்வ அமைப்புகள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்ணா ஹசாரே தரப்பில் கூறப்படும் இவை யாவும் உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்போது கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பை, இத்தகைய எதிர்ப்பின் மூலம் இன்னும் தள்ளிப்போகச் செய்வதால் யாருக்கு நன்மை? இத்தனை நாள் போராடியதற்குப் பலன் கிடைக்காமல் போய்விடாதா? என்பதை அண்ணா ஹசாரே குழு யோசித்ததாகவே தெரியவில்லை. இதைத் தங்களது கெüரவப் பிரச்னையாகக் கருதுகிறார்கள். இந்த இடத்தில்தான் அவர்கள் பாதை விலகுகிறார்கள்.
அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய பிறகுதான் லோக்பால் என்ற சட்டமே மக்கள் மத்தியில் பரவலாகத் தெரியவந்தது. இத்தனை ஆண்டுகளாய் கிடப்பில் போடப்பட்ட விவகாரத்துக்கு அவர்தான் உயிர் கொடுத்தார். அதன் பிறகுதான் காய்கள் நகர்த்தப்பட்டு, வரைவுமசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வரைவு மசோதாவில், அண்ணா ஹசாரே குழு சொல்லும் குறைபாடுகள் இருந்தாலும், அது நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால், அடுத்தடுத்த சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்து செம்மைப்படுத்திட வழி இருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பில் அடி முதல் முடி வரை ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதுதான் அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஆதரவு வெளிப்படுத்திய உண்மை. ஒரு சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக்கூடக் குறைந்தது ரூ. 100 லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறதே என்கின்ற கோபமும், ஒரு குடும்ப அட்டை வழங்க ரூ. 500 லஞ்சம் கேட்கிறார்களே என்கிற கோபமும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ரூ. 3,000 லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமையா என்கிற கோபமும்தான் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சிக்குக் காரணங்கள்.
இத்தகைய சாதாரண அரசு ஊழியர்களின் முறைகேடுகளை விசாரிக்க, கைது செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கிறது. விசாரணை அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், அரசு ஊழியர்களின் ஊழலையும், மாமூல்களையும் தடுப்பதற்கு இப்போது இருக்கும் சட்டங்களே போதுமானவை. ஆனால், அந்தச் சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை.
பெரிய ஊழலில் உயர் அதிகாரிகளும், பதவியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் ஈடுபடுவதால், சிறிய ஊழல்களை அவர்கள் அனுமதிப்பதுதான் அதற்குக் காரணம். தங்களுக்குக் கீழே பணிபுரியும் அரசு ஊழியர்களைத் தட்டிக் கேட்கும் தார்மிக உரிமையை "மெகா' ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் இழந்து விடுவதால் ஏற்படும் விளைவுதான் அது.
இப்போது இருக்கும் சட்டப்படி, பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் போன்றவர்களை விசாரிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் அனுமதி பெற்றாக வேண்டும். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் விசாரணை முறையாக நடத்தப்படாமல் முடக்கும் சாத்தியம் இருக்கிறது. அதனால்தான் லோக்பாலின் அவசியம் ஏற்படுகிறது. 2ஜி விசாரணையையே எடுத்துக் கொள்வோம். சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம்வரை போராடி முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின்மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறும்வரை, மத்தியப் புலனாய்வுத் துறை விரைந்து செயல்படாமல் முடக்கப்பட்டுத்தானே இருந்தது.
பத்து, இருபது மாமூல்பெறும் கடைநிலை ஊழியர்கள் வரையுள்ள எல்லா அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற அண்ணா ஹசாரே குழுவினரின் பிடிவாதத்தில் அர்த்தம் இல்லை. லோக்பாலுக்கு என்று தனியாக விசாரணைப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றால், இப்போது இருக்கும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு ஊழியர்களை என்ன செய்வது? இவர்களை லோக்பால் அமைப்புக்கு இடமாற்றம் செய்வது என்றால், அதைவிட இந்த ஏற்பாடே தொடரலாமே?
சட்டத்தில் ஊழலைத் தடுப்பதற்கான எல்லா பிரிவுகளும், வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்த வேண்டியவர்கள் தாங்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களை நெறிப்படுத்தவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் ஓர் அமைப்பு தேவை. அதுதான் லோக்பால். "லோக்பால்' முனைப்புடன் செயல்பட்டால், சட்டமும் செயல்படத் தொடங்கிவிடும்.
அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க அனுமதி தேவையில்லை என்கிற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதே அண்ணா ஹசாரே குழுவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. இப்போதைய உடனடித் தேவை லோக்பால். அந்த லோக்பாலில் உறுப்பினர்கள் யார் யார் என்பதைத்தான் நாம் இப்போது பார்க்க வேண்டும். நேர்மையானவர்களின் தலைமையில் முதலில் லோக்பால் அமையட்டும். அடுத்தகட்டமாக அதன் அதிகார வரம்புகளை அதிகரிப்பதுபற்றி யோசிப்போம். போராடுவோம். மாற்றங்களுக்கு வழிகோலுவோம்.
இப்போதைக்கு, முட்டுக்கட்டை போடாமல், குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற அண்ணா ஹசாரே குழுவினர் வழிகோலுவதுதான் சரியான முடிவாக இருக்கும். மக்கள் போராட்டத்துக்கான நேரமல்ல இது!
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum