விலை உயர்வின் விவாதங்கள்!
Page 1 of 1
விலை உயர்வின் விவாதங்கள்!
பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, நீண்ட விளக்கத்தையும் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து கடும் கண்டனங்களும் வந்திருக்கின்றன. இந்த நேரத்தில் சில விவாதங்களை எழுப்ப வேண்டியுள்ளது.
ஒரே ஆண்டிலேயே பல முறை உயர்ந்திருக்கிறது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. அதுவும் ரூபாய்களில். ஆனால், நீண்ட காலத்துக்குப் பிறகு, அரசுப் பேருந்துகளின் கட்டணத்தில் கிலோமீட்டருக்கு 14 காசுகளும், 22 காசுகளும் என காசுகளில் உயர்த்தப்பட்டதற்கு கடுமையான கண்டனங்கள் எழுவது வியப்பாய் இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான எதிர்ப்பு சடங்காக மாறிப் போனது எப்படி? தலையெழுத்தாய் யாரேனும் சிலர்தான் இதற்காகப் போராட வேண்டுமா என்ன? தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையைத் தாங்களாகவே நிர்ணயம் செய்கின்றன. அரசு நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு சரிபாதியளவில் வரியை நிர்ணயம் செய்கின்றன.
இந்தக் கொடுமைகளைக் கேட்க ஆளில்லை. அரசுப் பொதுத் துறை தனது ஸ்திரத் தன்மையைப் பாதுகாக்க சில காசுகளை உயர்த்துவதற்குக் காரணம் அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக, போக்குவரத்துக் கழகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. திடீரென அதிகக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, அடிக்கடி ஏற்றக் கூடாது என்றெல்லாம் கருத்து நிலவுகிறது. ஆனால், வேறுவழியில்லை ஏற்றித்தான் ஆக வேண்டும்.
மூடிவிடாமல், பொதுத் துறை நிறுவனத்தைப் பாதுகாக்க இதுவும் ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது. அதேநேரத்தில்தான் வேறு சில கேள்விகளையும் எழுப்ப வேண்டும்.
தேவைக்கேற்ப பேருந்துகள் இருக்கின்றனவா? நேரத்துக்கு வருகிறதா? பராமரிப்புடன் இருக்கிறதா? பணியாளர்கள் பற்றாக்குறையில்லாமல், தூக்கக் கலக்கமில்லாமல் ஓட்டுகிறார்களா? என்பன போன்று.
விலைவாசி உயர்வு என்பது மொட்டையாக விவாதிக்கக் கூடியதல்ல. எல்லா தளங்களிலும் தங்களின் ஒப்பீட்டை விரிவுபடுத்தி விவாதிக்க வேண்டும் என்பதை அரசுத் துறையிலிருந்து, சேவை அமைப்புகளில் இருந்து, தனிநபர் வரை புரிந்துகொள்ள வேண்டும்.
மின் கட்டணத்தைப் பொருத்தவரை- அந்தத் துறை என்னவோ மற்ற அரசுத் துறைகளிலேயே உயர்ந்த துறையாக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
30 முதல் 40 சதம் வரை பகிர்மான நஷ்டம் ஏற்படுவதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு அந்தத் துறையிலிருந்து எந்தப் பதிலும் வந்ததே இல்லை. மின் துறையிலுள்ள கணக்கீடுகள்- புள்ளிவிவரங்கள் எதுவும் இதுவரை வெளிப்படையாக வந்ததே இல்லை.
பல இடங்களில் நடைபெறும் கள்ளத்தனமான மின் திருட்டே மின் துறையை தொடர்ந்து பெருமளவில் சிதைத்து வருகிறது.
இதையெல்லாம் சரிசெய்ய முன்வராமல் கட்டணத்தை மட்டும் ஏற்றுவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு பக்கம் மக்களின் தலையில் மட்டுமே சுமையை ஏற்றுவதாக இருக்கும். எனவே, வெளிப்படையான துறையாக அதை மாற்றும் வரை மின் பற்றாக்குறையும், கட்டண உயர்வும் மர்மங்களாகவும், புலம்பல்களாகவுமே இருக்கும்.
அடுத்த ஒன்று பால் விலை. மாநிலத்தில் சரிபாதிக்கும் குறைவாகத்தான் ஆவின் நிறுவனத்தால் (அரசு நிறுவனம்) மக்களுக்கு பால் விநியோகம் செய்ய முடிகிறது. மீதமுள்ள தேவையை தனியார் நிறுவனங்கள்தான் ஈடுகட்டுகின்றன. ஆனால், தற்போது அரசால் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தை, ஏற்கெனவே தனியார் பால் நிறுவனங்கள் மக்களிடம் வாங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் ஏராளமான சலுகைகள் அளித்தும், காலம்காலமாக கறவை மாடுகள் இலவசமாகவும், மானியத்திலும் விநியோகம் செய்தும் அரசால் ஏன் மக்களின் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை?
இத்தனைக்கும் இந்த வேலைக்காக தனியாக ஓர் அமைச்சர், தனித் துறை, ஏராளமான இயக்குநர்கள், கூட்டுறவுப் பதிவாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கட்டடங்கள் எல்லாமும். ஆனால், பால் உற்பத்தியாளர்கள் இன்னமும் கிராமங்களில் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.
முடிவு ஒன்றுதான். சரியோ தவறோ, ஓர் உயர்வு வரும்போது அது சார்ந்த அனைத்தையும் விவாதித்துத்தான் ஆதரவையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த ஒரு நேரத்தில் மட்டுமாவது விவாதிக்காமல் விட்டால், பிறகு எப்போதுதான் இவற்றைப் புரிந்து கொள்வது?- புரியச் செய்வது?
நன்றி தினமணி
Similar topics
» கட்டணம், விலை உயர்வு: முதிர்ச்சியற்ற அணுகுமுறை
» சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.
» சி.பி.ஐ ரெய்டு. உயர்ந்தது சன் நிறுவன பங்குகள் விலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum