அமெரிக்கா எவ்வழி, நாமும் அவ்வழி!
Page 1 of 1
அமெரிக்கா எவ்வழி, நாமும் அவ்வழி!
ஓய்வூதியத் திட்டங்கள் வழங்கும் நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீடு 26 விழுக்காடு வரை அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியத் திட்டநிதி மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று ஆணையத்துக்கான சட்ட மசோதா இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அன்னிய நேரடி முதலீடு குறித்து முடிவு எட்டப்படவில்லை. தற்போது காப்பீட்டுத் துறையில், அனுமதிக்கப்படும் அதே அளவு (26 விழுக்காடு) அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தத் திருத்தம் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, காப்பீடு மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று ஆணையம் (ஐஆர்டிஏ) உருவாக்கப்பட்டு, உயிர் அல்லது உடைமைகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களில் 26 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. இந்த அனுமதி கிடைத்தவுடன் இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து முதலீடு செய்யத் தொடங்கின.
இப்போது, ஓய்வூதியத் துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.
ஓய்வூதியத் திட்டநிதி மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்பட்டபோது, "நியு பென்ஷன் ஸ்கீம்' என்பது "நேஷனல் பென்ஷன் சிஸ்டம்' என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர் சட்டங்களுக்கு உள்பட்ட தொழிற்கூடப் பணியாளர், தொழிலாளர் மட்டுமன்றி அமைப்புசாராத் தொழில்களில் உள்ளவர்களும், 20 பேருக்குக் குறைவாகப் பணியாளர் அல்லது தொழிலாளர் கொண்டிருக்கும் நிறுவனங்களும் இத்திட்டத்தில் சேர முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட தொழிலாளர்கள் இந்தியாவில் 50 கோடிக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இதனால், தனியார் ஓய்வூதிய நிறுவனங்கள் எந்த அளவுக்குக் களத்தில் இறங்குகின்றனவோ அந்த அளவுக்குப் பணம் காய்க்கும், லாபம் கொழிக்கும். பல நூறு லட்சம் கோடியாக இந்த சந்தாத் தொகை இருக்கும் என்பதைக் கணிக்க முடிகிறது. இந்தத் தொகையை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் முதலீடு செய்யக்கூடாது என்று நிபந்தனையுடன்தான் தனியார் ஓய்வூதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்றாலும், உள்ளே நுழையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காப்பீட்டுக்காகத் தரப்படும் பல லட்சம் கோடி ரூபாய் சந்தாத் தொகையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சொல்லியா தர வேண்டும்?
தனியார் நிறுவனங்கள் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள், அதன் பலன்கள் ஆகியவை, அரசு அமைப்பாகிய தொழிலாளர் வைப்புநிதி அலுவலகம் தரும் அதே பாதுகாப்பு, பலன்கள் அளிப்பதை உறுதி செய்வதும், இதில் குறைபாடுகள், அநீதிகள் இருந்தால் அவற்றைக் களைவதும்தான் ஆணையத்தின் பணியாகும்.
மத்திய அரசின் தொழிலாளர் வைப்புநிதிக்கு எத்தகைய வருமானவரி விலக்குகள் பெற முடியுமோ அதே அளவுக்குத் தனியார் ஓய்வூதியத் திட்டங்களுக்கு அதே சலுகைகள் பொருந்தும் என்பதால், தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களைத் தனியார் ஓய்வூதிய நிறுவனங்கள் தன்வசம் இழுக்கும். இதற்காக வசீகரமான பல திட்டங்களை அவர்கள் முன்வைப்பார்கள். அதிலும் குறிப்பாக, அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமூச்சில் இறங்குவார்கள் என்பது உறுதி.
காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அன்னிய நேரடி முதலீட்டு அளவை 26 விழுக்காட்டிலிருந்து 49 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கை நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அது நிறைவேறியவுடன், ஓய்வூதியத் துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக உயர்த்துவது கடினமல்ல.
புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, 2004-க்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் செலுத்தும் பி.எப் சந்தா தொகைக்கு இணையான நிர்வாக பங்குத் தொகையாக அரசு செலுத்தும் வழக்கம் இல்லாமல் போனது. இதற்கு அரசு சொல்லும் நியாயமான காரணம், அரசு நிறுவனம் லாபம் ஈட்டும் அமைப்பு அல்ல. அதனால், நிர்வாகப் பங்கு அளிக்க முடியாது என்பதுதான்.
இந்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் சந்தாதாரராக உள்ள தொழிலாளர்களும், தாங்கள் விரும்புகிற தனியார் ஓய்வூதியத் திட்டங்களுக்கு மாறிக்கொள்ளும் வசதியை அளிக்க வழிவகை செய்ய வாய்ப்புகள் உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய அனுமதி வழங்கப்படுமானால், எவ்வாறு பிஎஸ்என்எல் இணைப்புகளைப் புறக்கணித்துவிட்டு தனியார் தொலைபேசி இணைப்புகளுக்கு மக்கள் மாறினார்களோ அதேபோன்று ஓய்வூதியத் திட்டத்திலும் மக்கள் பல்வேறு சலுகைகளுக்காகத் தனியார் நிறுவனங்களுக்கு மாறுவார்கள். இந்த நிலைமை ஏற்படும்போது, மத்திய அரசின் தொழிலாளர் வைப்புநிதி அலுவலகத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துபோகும். காலப்போக்கில் அந்த அரசுத் துறையே மூடப்பட்டுவிடக் கூடும்.
தனியார் வங்கிகள், தனியார் தொலைபேசி, தனியார் விமானங்கள், தனியார் காப்பீடு, தனியார் ஓய்வூதியம்..... அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டத்தின்போது ஒரு வசனஅட்டை புதிய தத்துவத்தைச் சொன்னது: ""இப்போது அமெரிக்காவில் இருப்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் அரசல்ல. பெரும் நிறுவனங்களுக்காக (கார்ப்பரேட்), பெரும் நிறுவனங்களால், பெரும் நிறுவனங்களே ஆளும் அரசு!''
அமெரிக்காவுக்குப் பொருந்துவது இந்தியாவுக்குப் பொருந்தாமல் போய்விடுமா என்ன!
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum