ஜெய் கூடங்குளம்!
Page 1 of 1
ஜெய் கூடங்குளம்!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கக்கூடாது என்று கிளர்ச்சி செய்யும் மக்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கேட்டார், அதையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஞான தேசிகனும் அடுத்து கேட்டிருக்கிறார்.
இந்தக் கேள்வியை அவர்கள் இப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவைப் பார்த்துக் கேட்டதுதான் இந்தக் கேள்வி!
உயர் பதவியில் உள்ளவர்களின் ஊழலை விசாரிக்க "ஜன லோக்பால்' நியமிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதி அண்ணா ஹசாரேவைப் பார்த்தும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
அடுத்ததாக கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் எத்தனை தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்டு வருகிறார்கள், அவர்களுக்குத் தெரியாதா, அரசை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவை ""பணம்'' என்று.
இப்போது விற்கிற விலைவாசியில் தங்களுடைய சொந்தப் பாட்டைப் பார்த்துக்கொள்ளவே மக்களால் முடியவில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். எந்த ஒரு கிளர்ச்சிக்கும் காலணா கூட நன்கொடை தர முடியாமல் மக்கள் இருப்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
பணக்காரர்கள் எந்தக் காலத்திலுமே பொது நலனுக்காக விரும்பி நன்கொடை தருவது வழக்கமே இல்லை. அவர்களுடைய பெயர் பத்திரிகைகளில் வரும், சனி தோஷம் விலகும், பாவங்கள் மன்னிக்கப்படும், குறைந்தபட்சம் வருமான வரி விலக்காவது கிடைக்கும் என்றால்தான் தானம் செய்வார்கள். எனவே கூடங்குளம் பிரச்னைக்காக அவர்கள் நன்கொடை தந்திருப்பார்கள் என்ற சந்தேகம் கடுகளவுகூட காங்கிரஸ்காரர்களுக்கு வரவில்லை.
வெளிநாட்டிலிருந்துதான் பணம் வருகிறது என்று அனுமானிக்கவில்லை - தீர்மானமாகவே சொல்லிவிட்டார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
இப்போதுதான் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
பாபா ராம்தேவுக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருக்கிறது என்று அடிக்கடி கூறி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளரான திக்விஜய் சிங். கூடங்குளம் பிரச்னையில் அப்படி குற்றம்சாட்டவில்லையே, ஏன்?
கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட எந்த இயக்கமாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு வெளிநாட்டிலிருந்துதான் பணம் வருகிறது என்று குற்றஞ்சாட்டுவது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் வாடிக்கை. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதே குற்றச்சாட்டைக் கூறுகின்றனரே எப்படி? இதிலிருந்தே கூடங்குளத்தில் காங்கிரஸýக்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
காங்கிரஸ் கட்சியைப் போல தேசத்துக்கு உழைத்த கட்சியையும் பார்க்க முடியாது, காங்கிரஸ்காரர்களைப் போல தேச பக்தர்களையும் உலகில் எங்கேயுமே பார்க்க முடியாது. காந்தியத்தையே தியாகம் செய்த உத்தமர்கள் காங்கிரஸ்காரர்கள்.
""குடி குடியைக் கெடுக்கும்'' என்றார் காந்திஜி. அப்படிப்பட்ட மோசமான குடியை, ""குடித்தே ஒழிக்கட்டும் மக்கள்'' என்று நாடு முழுக்க கடைகளுக்கு அனுமதி தந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.
""அரசுத்துறை நிறுவனங்கள்தான் இந்த நாட்டின் கோயில்கள்'' என்றார் மதச்சார்பற்ற, பகுத்தறிவுவாதியான ஜவாஹர்லால் நேரு. ""நேருவின் வழி வந்த நாம் கோயில்களைப் பாதுகாப்பதா?'' என்று அவற்றைத் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர் ""கோயிலை'' விரும்பாத காங்கிரஸ்காரர்கள். (அரசுத்துறை நிறுவனங்கள்தான் நம் நாட்டு சர்ச்சுகள், மசூதிகள் என்று அந்த மகான் சொல்லிவிட்டுப் போயிருக்கக்கூடாதா? அவர் நாக்கில் அப்படி ஒரு சனி!)
இது இப்படியே இருக்கட்டும், வெளிநாட்டுப் பணம் இந்தியாவுக்கு வருவதை காங்கிரஸ்காரர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. இந்தியப் பணம் சுவீடன், சுவிட்சர்லாந்து, மோரிஷஸ், லீக்டென்ஸ்டைன், செயின்ட் கிட்ஸ் போன்ற நாடுகளுக்குப் போவதுதானே நமக்குக் கெüரவம் என்று நினைப்பவர்கள் அவர்கள்!
போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் பெற்ற பணமாக இருந்தாலும் ஆயுத வியாபாரத்தில் வந்த பணமாக இருந்தாலும் ஆட்டோவியோ குவாத்ரோச்சிக்கான கமிஷனாக இருந்தாலும் அது இந்தியாவுக்கே வரக்கூடாது, வெளிநாட்டுக்குத்தான் போக வேண்டும், அது பற்றிய தகவல்கூட நம் நாட்டில் எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் சுயமரியாதைச் சிந்தனையாளர்கள் காங்கிரஸ்காரர்கள். எனவேதான் காங்கிரஸ்காரர்களின் குற்றச்சாட்டு 100% உண்மையானது என்றே நம்ப இடம் இருக்கிறது.
கூடங்குளத்தில் இருப்பவர்களை எச்சரிக்கிறோம், இனியும் அணு மின் நிலையம் கூடாது, கதிரியக்கம் பரவும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், உங்களை நம்பி வெளிநாடுகளில் ஆர்டர் கொடுத்து கமிஷன் பெற்றுவந்தவர்களின் கோபம் உங்களைச் சும்மா விடாது. ""நம்பிக்கை மோசடி'' செய்ததாக உங்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளிவிடுவார்கள். நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு எப்படிப்பட்டது என்று தெரியுமா? கோபாலபுரத்து ஆண்டவனிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கூடங்குளத்தில் அப்படியே விபத்து நேர்ந்துவிட்டால்தான் என்ன? குடும்பத்தாருக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தராமலா போய்விடும்?
மத்திய, மாநில அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் உங்களை ஊர் மந்தைகளிலும் ஆஸ்பத்திரிகளிலும் வந்து பார்க்க மாட்டார்களா என்ன?
கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கும் வெள்ளி நிற சிறப்பு உடையை அணிந்து பார்க்கவும் அத்தோடு மக்கள் அருகில் கவலை தோய்ந்த முகத்தோடு போஸ் கொடுத்து படம் எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்கும் ஆசை இருக்காது என்றா நினைக்கிறீர்கள்?
விபத்து நேர்ந்தால் முன் எச்சரிக்கையாக மாநில வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை இணைந்து முகாம்களில் உப்புமா, கிச்சடி, சாம்பார் சாதம், தயிர்சாதம் தயாரித்துக் கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?
அவ்வளவு ஏன், சிறப்பு நிவாரண முகாமிலேயே தலைமையிடத்து தனி தாசில்தார் ஒருவரை சேர், டேபிள் போட்டு சாதிச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் எல்லாவற்றையும் ஒருங்கே தர வைத்து ""ரொக்கமாக''வே கையில் கொடுக்க மாட்டார்களா என்ன? (ரொக்கமாகத் தருவதுதானே வருவாய்த்துறையினருக்கும் பிடிக்கும்)
கூடங்குளம் பகுதியில் மட்டும் மத்திய அரசு ""வேளைக்கு உணவு'' திட்டம் என்ற ஒன்றைப் புதிதாகத் தொடங்கப் போகிறது, விவரங்களை சத்தியமூர்த்தி பவனிலேயே கேட்டுப்பெறுங்கள்.
அண்ணா ஹசாரேவைப் பார்த்து உண்ணாவிரதம் இருந்து கெட்டுப் போகாதீர்கள், காங்கிரஸ்காரர்களைப் பார்த்து 3 வேளையும் நன்றாக சாப்பிடக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஜெய் கூடங்குளம்!
நன்றி தினமணி
Similar topics
» ஜெயிக்குமா கூடங்குளம் போராட்டம்? ,
» கூடங்குளம்: அச்சமா, ஆதாயமா?
» கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்
» கூடங்குளம்: அச்சமா, ஆதாயமா?
» கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum