என்ன காரணம்?
Page 1 of 1
என்ன காரணம்?
மேற்கு வங்க மாநிலத்தில், பி.சி.ராய் மருத்துவமனையில் இறந்த 18 குழந்தைகள் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 36 குழந்தைகள் இறந்தனர். நவம்பர் மாதத்திலும்கூட இதுவரை அந்த மாநிலத்தில் மால்டா மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றாலும், இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் சிறார் மரணங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. காரணம், பிகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் இதுவரை 82 குழந்தைகள் இறந்துவிட்டனர். புத்தகயா பகுதியில்தான் இந்த மூளைக்காய்ச்சல் மிக அதிகமான குழந்தைகளைத் தாக்கியுள்ளது. 2009-ம் ஆண்டில் இதே பகுதியில் 42 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் இறந்துள்ளனர்.
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் மரணம் ஓர் ஊரில் அல்லது ஒரு மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நிகழும்போதுதான் இத்தகைய மரணங்கள் மக்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. மேற்கு வங்கம், பிகார் மட்டுமன்றி இத்தகைய குழந்தைச் சாவுகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே நடந்துகொண்டிருக்கின்றன.
குழந்தை மரணங்களுக்கு மிக முக்கிய காரணம், குழந்தை மருத்துவப் பிரிவுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நோய்த் தடுப்பூசிகள் முறையாகப் போடப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் ஆகியவைதான்.
எந்த மாநிலம் அல்லது எந்த அரசின் ஆட்சி என்ற போதிலும், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவர் பணியிடங்களும் பிரிவுகளும் மிகக் குறைவுதான். பொது மருத்துவர்தான் குழந்தைகளின் நோய்க்கும் சிகிச்சை அளிப்பவராக இருக்கிறார். இதையும் மீறி, அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு இருந்து, அதற்கு மருத்துவரும் இருப்பாரேயானால், அவருக்கு ஊருக்குள் தனியாக கிளீனிக் இருக்கும். அரசு மருத்துவமனைக்கு அவரது சேவை நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தனை சிக்கல்களையும் மீறித்தான் இந்தியாவில் குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்து வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 2008-ம் ஆண்டில் 5 வயதுக்கு உள்பட்ட 3.71 லட்சம் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். தற்போது மேற்கு வங்கத்தில் இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மரணத்துக்கும் அதிகளவு காரணம் நிமோனியா காய்ச்சல்தான்.
யுனிசெப் அறிக்கையின்படி, 2005-ம் ஆண்டில் இந்தியாவில் இறந்த, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 லட்சம்! இது உலகம் முழுவதிலும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 20 விழுக்காடு!
இந்தியாவில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பெற்றோர் 69 விழுக்காடுதான். மற்ற 31 விழுக்காட்டினர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர். ஒருவேளை, குழந்தைகளுக்கு அவரவர் தெய்வக் குறியீடுகளைப் போட்டு காப்பாற்றும் பொறுப்பைப் படைத்தவனிடமே விட்டுவிடுகிறார்கள் போலும். மருத்துவமனை அல்லது கிளீனிக் வரும் 69 விழுக்காடு குழந்தைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெறும் குழந்தைகள் 13 விழுக்காடுதான்!
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நர்சரி பள்ளிகள் மற்றும் விளையாடும் இடங்களில்தான் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, இக்குழந்தைகள் தங்கள் உணவை உண்ணும் முன்பாக கைகளைக் கழுவிவிட்டு உண்ண வேண்டும் என்கின்ற சிறிய நல்வழக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறது யுனிசெப். இதற்காக பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி, மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். உலக கைகழுவும் நாள் என்று அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கைகளை சோப்புப் போட்டு எப்படி கழுவுவது என்று சொல்லித் தரப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சோப்பும் துடைத்துக்கொள்ள ஒரு துண்டும்கூடக் கொடுப்பதில்லை. ஆனால், நிதி மட்டும் முழுமையாகச் செலவாகிவிடுகிறது. தண்ணீரில் கை கழுவினாலே நிதி செலவாகிவிடுகிறதே, அது எப்படி என்று யாரும் கேட்பதில்லை. குழந்தைகளுக்கும் கேட்கத் தெரியாது.
நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற எந்தவொரு நோய்த் தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதுதான். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்குக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதைவிடச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவொரு தடுப்பூசியாலும் தடுப்பு மருந்தாலும் அளித்துவிட முடியாது என்கிறது யுனிசெப் நிறுவனம்.
ஆனால், இந்தியாவில் குழந்தைக்குத் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்போர் 46 விழுக்காடுதான் என்று யுனிசெப் சொல்கிறது. இந்தியாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமும் கொண்டாடப்படுகிறது. இதற்கும் அரசு நிறைய பணமும் செலவிடுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் அளவுக்கு ஆரோக்கியமான தாய்மார்கள் இல்லாமல் இருப்பதுகூட அதற்குக் காரணம் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?
பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, குழந்தைகளுக்குச் சுகாதாரமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் 90 விழுக்காடு காய்ச்சல்களைத் தடுத்துவிட முடியும். நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைக் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நிறுவவும் பராமரிக்கவும் மட்டுமே செலவிட்டாலே போதும், நாளைய தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகவும், குழந்தைச் சாவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படவும்கூடுமே, இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா தெரிய வேண்டும்?
நன்றி தினமணி
Similar topics
» திவாலாக காரணம் என்ன?
» கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?
» கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?
» யார் காரணம்?
» கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்
» கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?
» கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?
» யார் காரணம்?
» கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum