நிலைகுலைந்த நம்பிக்கை
Page 1 of 1
நிலைகுலைந்த நம்பிக்கை
அரை நூற்றாண்டுக்கு முன்னர், அரசு வேலை என்பது படித்த அனைவருக்கும் எட்டும் கனியாகவே இருந்தது. ஏனென்றால், அப்போது கல்வி கற்ற மக்களின் விகிதம் மிகக் குறைவாக இருந்தது. எட்டாம் வகுப்புப் படித்திருந்தாலே அரசு வேலை கிடைக்கும் சூழல் இருந்தது. எட்டாம் வகுப்புப் படித்தவர்களே அந்த அளவுக்கு கல்வியில் நல்ல புலமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
அப்போதைய எட்டாம் வகுப்பு, இன்றைய பட்டப் படிப்புக்குச் சமமாக இருந்த காலகட்டம் அது. இன்றோ அரசு வேலை என்பதே கனவாக மாறிவிட்டது. கனவு போய், இப்போது நடைபெறும் சம்பவங்களால் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் தகர்ந்து போய்விட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து, தேர்வாணையத்தின் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான ஆவணங்கள் ஆயிரக்கணக்கிலும், பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவர்கள், அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்; பலர் பதிவு செய்து சீனியாரிட்டியுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும், வரும் என எதிர்பார்த்துத் தலைமுடியும் தாடியும் நரைத்துப் போனதுதான் மிச்சம்.
படித்த இளைஞர்களின் தலைவிதி இப்படி இருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் முறைகேட்டில் ஈடுபட்டு, செல்வச் சீமானாய் மாறியிருப்பது, தேர்வு எழுதுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அண்மையில் நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதாகப் புகார் கிளம்பியது. அடுக்கடுக்கான முறைகேடுகளால் ஆடிப்போன இளைஞர்கள், ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்து இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.
முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது கூக்குரல்கள் கிளம்பினாலும் அதுபற்றியெல்லாம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டும்விதமாக, புதிய அரசு பொறுப்பேற்றதும், தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தியது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இத்தகைய சோதனை நடத்தப்பட்டது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றிலேயே இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 முதல் குரூப்-8 வரையிலான பல்வேறு பதவிகளுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு குறித்த அறிவிப்பு தேர்வாணையத்தின் மூலம் எப்போது வரும் என பட்டதாரிகளும், இளைஞர்களும் எதிர்பார்த்து விண்ணப்பிக்கின்றனர்.
இதில் குரூப்-1 முதல் குரூப்-3 வரையிலான பதவிகளுக்குப் பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 முதல் குரூப்-8 வரையிலான பதவிகளுக்கு, 10-ம் வகுப்பு முதல் அதற்குக் கீழ்நிலை வகுப்பு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 தேர்வுக்குக் குறைந்தது 2 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். குரூப்-2 மற்றும் குரூப்-3 தேர்வுக்குக் குறைந்தது 8 லட்சம் முதல் 12 லட்சம் பேரும், குரூப்-4 முதல் குரூப்-8 வரையிலான தேர்வுக்கு 12 லட்சத்துக்கும் மேலானவர்களும் விண்ணப்பிக்கின்றனர்.
லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் தேர்வாணையத்தின் தலைவரும், உறுப்பினர்களுமே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்துக்காக பிறரின் வேலைவாய்ப்பை தட்டிப் பறித்த இவர்களைப் போன்ற அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணைக்கு உள்ளாகி இருக்கும் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகள் குறித்தும், தேர்வு பெற்றவர்கள் படித்த தனியார் பயிற்சி நிறுவனங்களையும், இந்த நிறுவனங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்ட அரசியல் பிரமுகர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க வேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தேர்வாணைய உறுப்பினர்களாக இருந்தவர்களில், முன்னாள் நீதிபதியும் ஒரு வழக்குரைஞரும் அடக்கம். நேர்மைக்கும் உண்மைக்கும் கடைசி சாட்சியான நீதித்துறையில் பணிபுரிந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, அரசு வேலைவாய்ப்பு லட்சியத்தில் இருந்த பல்லாயிரம் பேரின் வாழ்வைப் பாழாக்கி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்துகளைக் குவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையையும், சமூகத்தின் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum