மக்களாட்சி என்பது இதுதானா?
Page 1 of 1
மக்களாட்சி என்பது இதுதானா?
இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று பலராலும் பாராட்டப்படுகிறது. இந்த நாடு இன்னும் சில ஆண்டுகளில் சீனாவைவிட மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துவிடும் என்று உலக அமைப்புகள் கணித்திருக்கின்றன. இவையெல்லாம் கேட்பதற்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.
உலக மக்கள்தொகை 700 கோடியாகப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவும், சீனாவும் சேர்ந்து 250 கோடி மக்கள்தொகை கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
"முப்பது கோடி முகமுடையாள்' என்று பாரதி பாடிய பாரத நாடு இப்போது நான்கு மடங்காக அதிகரித்துவிட்டது. மக்கள்தொகை பெருகப் பெருக மக்களாட்சியின் மதிப்பும் பெருகிக்கொண்டே போகிறது.
"பொருளாதார ராஜதந்திரம்' பற்றிய பொருளில் நியூயார்க் பொருளாதார கிளப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியப் பொருளாதாரம் பற்றிப் பாராட்டியுள்ளார்.
"உலகின் முக்கிய சக்தியாக அமெரிக்கா விளங்க வேண்டுமானால் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் பிரேசிலில் உள்ளதுபோல வெளியுறவுக் கொள்கையின் மையப்பகுதியாக பொருளாதாரம் இருக்க வேண்டும்' என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உலகம் வியந்து நோக்குவதற்குக் காரணம் இந்தியா மக்கள்தொகையால் மிகப்பெரிய சந்தையாக இருப்பதுதான். இந்தச் சந்தையைத் தங்கள் பொருளாதார விற்பனைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அவை விரும்புகின்றன. அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் முன் தங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள குடிமக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். மக்கள் இல்லாமல் மக்களாட்சி ஏது?
தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் குடிமக்களுக்குத்தான் அறிவுரை கூறுகின்றனர். "வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை' என வலியுறுத்துகின்றனர். அவ்வாறு ஜனநாயகக் கடமையைச் செய்யாதவர்கள் மேல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.
இது ஒருவகையில் சரியாகத்தான் தெரிகிறது. நாட்டை ஆள்வதற்கு ஓர் ஆட்சியை அமைக்கும் கடமையைச் செய்யாமல் உரிமையை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான்.
"இராமன் ஆண்டால் என்ன?, இராவணன் ஆண்டால் என்ன?' என்று அவர்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டியது யார்? அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா?
வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் அளிக்கப்பட்ட கடமையை ஒழுங்காகச் செய்கிறார்களா? அவ்வாறு கடமையைச் செய்யாதவர்களைத் திரும்பப் பெறும் உரிமை வாக்களித்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? தங்கள் கடமையைச் செய்வதற்கு உரிமை வழங்கிய மக்களிடமே லஞ்சம் கேட்கும் ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்கச் சட்டம் வேண்டாமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்கான அரசாக இல்லாமல் கட்சி அரசாகவே செயல்படுகிறது. இது மக்களாட்சியையே கேலி செய்வது ஆகாதா? அரசாங்க சலுகைகளும், வேலைவாய்ப்புகளும் ஒப்பந்தப் பணிகளும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே வழங்குவது எழுதப்படாத சட்டமாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.
அரசாங்கம் விருது வழங்குவதிலும்கூட தகுதி, திறமை பார்க்கப்படுவதில்லை. கட்சி சார்ந்தவர்களுக்கே வழங்குவது வழக்கமாகிவிட்டது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஓர் அரசு மக்களாட்சியின் மாண்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதைப் பற்றி நல்லவர்களும், நடுநிலையாளர்களும் கவலைப்படுவதால் மக்களாட்சிக்கு மரியாதையிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் வெற்றிபெற்று அரசு அமைத்தவுடன் எதிரிடையாகச் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. வாக்களித்த மக்களா? வாரி வழங்கிய பெரும்புள்ளிகளா? வாக்குகளைப் பெறுவதற்குப் பணம் தேவைப்படுவதால் நன்கொடைகளை வாரி வழங்கியவர்களுக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள பணம் படைத்தவர்களின் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம். இவரது சொத்து மதிப்பு 2,200 கோடி டாலர் ஆகும்.
இரண்டாவது இடத்தில் உருக்காலை நிறுவனர் லட்சுமி மிட்டல் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1,920 கோடி டாலர். மூன்றாவது இடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி (1,300 கோடி டாலர்) உள்ளார். இப்பட்டியலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
"இந்தியாவின் செல்வந்தர்களைப் பொருத்தவரை இந்த ஆண்டு கொந்தளிப்பான ஆண்டாகும். இந்தியாவின் பொருளாதாரம் 8 விழுக்காடாக உள்ளது. பல்வேறு புகார்கள் மற்றும் உயர்ந்துவரும் பணவீக்கம் உள்ள நிலையிலும், செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என்று அந்த இதழ் கூறியுள்ளது.
இவ்வாறு இந்தியாவில் செல்வந்தர்களின் வளர்ச்சி குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால், பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் நிலை உயர்ந்து இருக்கிறதா? விலைவாசி உயர்வால் மக்கள் வேதனையுடன் வாழ்கின்றனர்; வேலையில்லாமையால் இளைஞர்கள் விரக்தியில் வாடுகின்றனர்; உணவளிக்கும் விவசாயிகளும், உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும் நிம்மதியாக இருக்கிறார்களா?
தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 1997 முதல் 2009 வரை 2,16,500 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது நாட்டுக்குப் பெருமை சேர்க்குமா?
இப்போது பெட்ரோல் விலை ஏற்றத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துள்ளன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் எதிர்ப்பதுதான் வேடிக்கை. இதன் மூலம் மத்திய அரசு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியிருக்கிறது. ஏற்கெனவே உணவுப் பணவீக்க விகிதம் 12.21 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு என்பது அனைத்துப் பொருள்களின் விலையும் மேலும் உயரவே வழிவகுக்கும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாடு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தரப்பட்ட பிறகு இதுவரை 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. "பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது சரியே' என்று பிரதமர் மன்மோகன் சிங் நியாயப்படுத்தியுள்ளார்.
சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை இடதுசாரிகள் மறுத்துள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
"கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 40 விழுக்காடு உயர்ந்துள்ளது; பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்கள் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சியை மக்களாட்சி என்று எப்படி அழைப்பது?
ஐ.நா. அவையின் மனிதவள மேம்பாட்டு அறிக்கை தரும் எச்சரிக்கையை மக்களாட்சிகள் மதித்து நடப்பது நல்லது. மோசமான சுற்றுச்சூழல் காரணிகளால் உலக உணவுப் பொருள்கள் விலை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை வரும் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகை பெருகி வருகிறது. அதற்கேற்ப உணவு உற்பத்தி கட்டாயம் அதிகரிக்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழல் நிகழ்வுகளால் நிலத்தின் தன்மை குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை உணவுப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை தனது வருவாயில் பெரும்பகுதியை அடிப்படை உணவுக்கே செலவிட வேண்டியுள்ளது. அடிப்படை உணவு விலை உயரும்போது வருவாய் குறைவாக உள்ள ஏழை மக்களுக்குச் சத்துணவு குறைபாடு அதிகரிக்கும். இதனால் ஏழை மக்கள் ஊட்டச்சத்து இல்லாமல் உயிர் வாழ்வதற்கான உணவை மட்டும் சாப்பிட வேண்டியிருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பருவ நிலை மாற்றம் காரணமாக நிலத்தின் தரம் குறைவதால் 17 விழுக்காடு விவசாயிகளின் உற்பத்தித் திறன் குறையும்; குறிப்பாக, தானிய உற்பத்தி குறையும். ஆனால், நுகர்வுத்திறன் அதிகரித்துள்ளது.
கிராமப்புற மக்கள் தினக்கூலி ஊதியத்தின் பெரும்பகுதி உணவுக்கு இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டாமா?
""இன்று அரசாங்கத்தின் அரியணையில் அமர்வதென்பது புலியின் மேல் சவாரி செய்வது போன்றது. அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை; உல்லாச வேளையும் இல்லை...'' என்றார் நேரு. இன்று அரசியல் அப்படியா இருக்கிறது? லாபகரமான தொழிலாக இருக்கிறது. இல்லாவிட்டால் ஊதியம் இல்லாத உள்ளாட்சிப் பதவிகளுக்கு இவ்வளவு செலவு செய்வார்களா?
நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்கள் ஏமாளிகள் அல்லர்; இந்தத் தேசத்தின் வணக்கத்துக்கு உரியவர்கள். அவர்கள் இல்லையெனில் நாடு ம் இல்லை; நாமும் இல்லை. நாம் நாட்டை நேசிக்க வேண்டுமென்றால் நாடும் நம்மை நேசிக்க வேண்டும் என்பதை ஆளுவோர் யோசிக்க வேண்டும். மக்களாட்சி என்பது அதுதான்.
நன்றி தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum