உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை

Go down

சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Empty சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை

Post by nandavanam Sat Nov 05, 2011 3:52 am

தமிழக மக்களின் அரசியல் மனமுதிர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த முடிவுகளை எந்தக் கட்சியுமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அவைகள் செயல்பட்ட விதத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் நிரூபித்துள்ளன.

மண்ணைக் கவ்விய பாட்டாளி மக்கள் கட்சி
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Pmk

சட்டசபை தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சி அமைத்த பின்னர், முதன்முதலில் முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு வாயாடியது பா.ம.க.தான். கழகங்களுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் தனித்தே இயங்கப் போவதாகவும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு கழகத்துடனும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தயவால் பதவியும், பணமும் சுகமாய் அனுபவித்து வந்தவர்களுக்கு, தங்கள் குல மக்களே தங்களை உதாசீனம் செய்யத் தொடங்கிவிட்டனர் என்கிற உண்மையை உணரமுடியவில்லை.

தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ அரசியல் பதவிகள் தேவையில்லை என்று வீர வசனம் பேசிவிட்டு, பின்னர் பச்சோந்தி அரசியல் செய்துகொண்டு பதவி சுகங்களை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு ராஜ்ய சபை இடத்திற்காக வெட்கமில்லாமல் அலைந்து திரிந்ததைக் கண்ட வன்னியர் குல மக்கள் மருத்துவரையும் அவரின் அடிப்பொடிகளையும் புறந்தள்ள முடிவு செய்தது உண்மை. அவ்வுண்மை தெரியாமல் வன்னியர் குல மக்கள் அனைவரும் தம்முடனேயே இருப்பதாக ஒரு மாயையில் உழன்று கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸ் தம்முடைய ஜாதி பலத்தைக் காண்பிக்கலாம் என்கிற அசட்டு தைரியத்தில் தனியாக உள்ளாட்சித் தேர்தலையும் அதற்குப் பின்வரும் மற்ற தேர்தல்களையும் சந்திப்பதாகச் சவால் விட்டார்.
சட்டமன்றத் தேர்தலில் தாம் தோற்றுப் போனதற்குத் திமுகதான் காரணம் என்று நினைத்தாரே தவிர, தம்குல மக்களின் மனப்போக்கை சரியாகப் படிக்கவில்லை அவர். அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை வன்னியர்கள் என்றோ புறக்கணித்து விட்டனர் என்பதே உண்மை. கூட்டணி சுகத்தில் அவ்வுண்மை ராமதாஸ் கண்களுக்குப் புலப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் விழுந்தது மரண அடி.
சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு 5.23% வாக்குகள் பெற்ற பா.ம.க., தற்போது மொத்தம் 3.55% வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டே இரண்டு பேரூராட்சிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. மாநகராட்சிகளில் 2 கவுன்சிலர் இடங்களும், நகராட்சியில் 60 கவின்சிலர் இடங்களும், பேரூராட்சியில் 108 வார்டுகளும், 3 ஊராட்சிகளும், 227 ஊராட்சி ஒன்றியங்களுமாக மொத்தம் 402 இடங்கள் மட்டுமே வென்றுள்ளது. ஜாதி அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் செய்துகொண்டு தமிழகத்தையும் இரண்டாகத் துண்டாட வேண்டும் என்று பிரசாரம் செய்துகொண்டிருந்த பாமகவைப் புறந்தள்ளி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். நுணலும் தன் வாயால் கெடும் என்கிற பழமொழிக்கு உதாரணமாக, ‘தனியாக தேர்தலை சந்திப்போம்’ என்று முழங்கிய பா.ம.க. மண்ணைக் கவ்வியிருப்பது தமிழகத்திற்கு நல்லது. மக்கள் புகட்டிய பாடத்தைப் புரிந்துகொள்வது பா.ம.கவுக்கு நல்லது.
தலைகுப்புற விழுந்த காங்கிரஸ்
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Congress

அடுத்ததாகத் தலைகுப்புற விழுந்திருப்பது காங்கிரஸ். 1967ல் ஆரம்பித்த இறங்குமுகம், தற்போது இனி எழுந்திருக்கவே முடியாது என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம் என்று, தான் ஏதோ ஊழலே செய்யத் தெரியாத கட்சி போலப் புனிதப்பசு வேடம் போட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் என்பது வாழ்க்கை முறை என்பதை மக்கள் அறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்து வரும் லட்சணத்தைக் கண்டு வெறுத்துப் போயிருந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தலிலும் சரியான தண்டனை கொடுத்துள்ளனர். வரலாறு காணாத ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்குப் பங்கில்லை என்பதாக வேடம்போட்ட காங்கிரசின் பொய் முகத்தைக் கிழித்துள்ளனர் தமிழக மக்கள்.

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு கழகத்தின் முதுகிலும் மாற்றி மாற்றி சவாரி செய்து வந்து, பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஊழல் மற்றும் சுயநல அரசியலில் காலம் தள்ளிக் கொண்டிருந்த, எவ்விதத்திலும் மக்களுக்குப் பிரயோசனம் இல்லாதவர்கள் என்று பெயரெடுத்த மாநிலத் தலைவர்கள், ஒரே குடும்பத்தின் காலடியில் தன்மானமும் சுயமரியாதையும் இன்றி, முதுகெலும்பில்லாத பூச்சிகளாக ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மக்கள் வெறுத்துப் போயிருந்தனர் என்பது உண்மை. உண்மை இவ்வாறிருக்க, எந்த தைரியத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தனரென்று அக்கட்சித் தலைவர்களுக்கே தெரியாது. சட்டமன்றத் தேர்தலிலேயே தமிழகத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை கட்சி மேலிடம். தமிழகத்தில் கட்சியின் நிலைமை, கட்சியின் மேலிடத்திற்குத் தெரிந்த அந்த உண்மை, மாநிலத் தலைகளுக்குத் தெரியாததுதான் நகைமுரண்.
மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், ஒரு தகுதியும் இல்லாத வெளிநாட்டுப் பெண்மணியை “அன்னை” என்று முன்னிலைப் படுத்தி மனமுதிர்ச்சியற்ற அவர் மகனின் முகத்தைக் காண்பித்துவிட்டால் மக்கள் வாக்களித்து விடுவர் என்றுத் தப்புக் கணக்குப் போட்டதன் பயன், இன்று தலைகுப்புற விழுந்து கிடக்கிறது ராஜாஜியும், காமராஜரும், சத்தியமூர்த்தியும் மற்றும் பல உன்னத தலைவர்களும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சி.
ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக்கூட வெல்ல முடியவில்லை இந்த தேசியக் கட்சியால். மாநகராட்சி கவுன்சிலில் வெறும் 17 இடங்களே பெற்றுள்ளது இந்தத் தேசியக் கட்சி. 24 பேரூராட்சிகளை வென்றதுகூட எப்படி என்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. அது அவர்களுக்கே தெரியாமல் நடந்த நிகழ்ச்சி. சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு 9.3% வாக்குகள் பெற்ற காங்கிரஸ், தற்போது மிகவும் குறைந்து 5.7% வாக்குகளுடன் 749 இடங்கள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை இழந்து நான்காவது இட்த்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. சுயேச்சைகளைக் கணக்கில் கொண்டால் ஐந்தாவது இடம்தான்.
கழகங்கள் தமிழகத்தின் தீமைகள் என்றால், அந்தத் தீமைகளை வளர்த்த பெருமை காங்கிரஸையே சாரும். ஆகவே தீமையை அகற்றுவதை விட தீமையை வளர்த்தவர்களை அகற்றுவதே தலையாய கடமை. அக்கடமையை சிரமேற் கொண்டு தமிழ் மக்கள் செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மறைவது தமிழகத்திற்கு நல்லது. நேரு குடும்பத்தை வெளியே தள்ளுவது காங்கிரஸுக்கு நல்லது.
மதியிழந்த தேமுதிக.
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Dmdk

1996ல் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சரியான வாய்ப்பிருந்தபோது அரசியல் பேருந்தைத் தவறவிட்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு சும்மா சினிமாவில் பஞ்ச் டையலாக் பேசியதோடு சரி. தனி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும் துணிவில்லாமல், ஏதாவதொரு கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் தைரியம் இல்லாமல், ஒரு கோழையாகத் தன்னை அவர் நிலைப்படுத்திக் கொண்டது துரதிர்ஷ்டம்.

ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காட்டை சொல்வது வழக்கம். அதுபோல ஏழைகளின் ரஜினிகாந்த் என்று விஜய்காந்தை ஆரம்ப நாட்களில் சொல்வார்கள். ரஜினியின் தயக்கத்தைப் பார்த்தார் விஜயகாந்த். தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் பெரிது என்பதாலும் ரஜினி உருவாக்கியிருந்த வெற்றிடத்தை நிரப்பலாம் என்கிற எண்ணத்திலும் அதிரடியாக தே.மு.தி.க வை ஆரம்பித்தார். எப்போ வருவார், எப்படி வருவார் என்று தெரியாதபோதும் வருவார்… வருவார்… என்று நம்பி கடைசியில் ஏமாந்துபோய் வெறுத்துப்போன ரஜினி ரசிகர்கள் பெரும்பான்மையானோர் அப்படியே விஜயகாந்தின் கட்சிக்குத் தாவினர்.
விஜயகாந்த் செய்த புத்திசாலித்தனமான காரியம் இரண்டு கழகங்களுக்கும் ஒரு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியதுதான். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனியாக தேர்தலை சந்தித்து, அதுவும் கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில், 8% வாக்குகள் பெற்றது ஒரு சாதனைதான். பின்னர் 2009 மக்களவைத் தேர்தலிலும் தனியாகவே நின்று தன் வாக்கு வங்கியை 10% ஆக அதிகரித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அதன் பலன் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது. எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கின்ற காரணத்தால், இணக்கமான சூழ்நிலையில் முதல்வருடன் சேர்ந்து பணிசெய்து ஆளும் கட்சியிடம் மட்டுமில்லாமல் மக்களிடமும் நற்பெயர் வாங்கும் வாய்ப்பும் கிட்டியது.
கிடைத்த அந்தஸ்தையும்ம் வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்தி ஒரு செயல்திறன் மிக்கத் தலைவராகத் திகழ வேண்டிய தருணத்தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்குத் தன்னுடைய கூட்டும் முக்கியமான காரணம் என்கிற மமதை தலைக்கேறியதா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான பேச்சு வார்த்தையில் சற்று விட்டுக் கொடுத்துப் போயிருந்தால் இன்று பல இடங்களுடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். வாக்கு வங்கியையும் அதிகரித்திருக்கலாம்.
இரண்டாவது இடத்தைத் தி.மு.கவிடம் தாரை வார்த்துக் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் வாக்கு வங்கியையும் அதிகரிக்க முடியாமல் போனது. கிடைத்த இடங்களும் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகள் மட்டுமே. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்திருந்தால் சுயேச்சைகளையும் தனக்குப் பின்னே தள்ளியிருக்கலாம். இப்போது, இந்தக் கட்சியினால் 10% க்கு மேல் முன்னேற முடியாது என்கிற பிம்பம் மக்களிடையே உருவாகும் வாய்ப்பும் அதிகம். உள்ளாட்சித் தேர்தலில் செய்த தவறின் விளைவுகளை அடுத்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தே.மு.தி.க உணரப்போவது நிச்சயம்.
காணாமல் போன கம்யூனிஸ்டுகள்
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Indian-communist

பா.ம.க. மண்ணைக் கவ்வியதும், காங்கிரஸ் தலைகுப்புற விழுந்ததும் தமிழகத்திற்கு நல்லது என்றால் கம்யூனிஸ்டுகள் காணாமல் போனது அதைவிட நல்லது. உலக அளவில் பொய்த்துப்போன, இந்தியாவிற்கு சம்பந்தமில்லாத ஒரு அன்னிய சித்தாந்தத்தைக் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கும்பலினால் நாட்டிற்கு என்ன பயன்? இவர்கள் 35 வருடங்கள் கோலோச்சிய பிறகும் மேற்கு வங்கம் பல துறைகளிலும் பின்தங்கியிருப்பது எதனால்? என்ன பதில் தரமுடிந்தது இவர்களால்? இன்று மாவோயிஸத் தீவிரவாதம் பிரும்மாண்டமாக வளர்ந்து நாட்டின் 16 மாநிலங்களில் படர்ந்திருப்பது யாருடைய ஆதரவினால்?

காங்கிரஸ் போலவும், பா.ம.க. போலவும் இரு கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டதைத் தவிர்த்து உருப்படியாக இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை. அதே சமயத்தில் தமிழகத்தில் திராவிட இனவெறியாளர்களுடன் சேர்ந்துகொண்டு தேசப்பற்றை அழித்ததிலும், பிரிவினை வாதத்தை பெருக்கியதிலும் இவர்களுக்குப் பங்கு உண்டு.
இடது என்றாலே இடர் ஏற்படுத்துவது, இன்னல் விளைவிப்பது, இடுக்கண் உண்டாக்குவது என்று பொருள் என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து சென்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 4.38% வாக்குகள் பெற்றன. ஆனால் இபோதோ 1.7% வாக்குகளே பெற்றுள்ளன. 2 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும், 5 ஊராட்சிகளும் கிடைத்தது ஆச்சரியம்தான். பின்வரும் தேர்தல்களில் முழுவதுமாக காணாமல் போவது நிச்சயம் என்றே தோன்றுகிறது.
மறுமலர்ச்சியின்றி மங்கிப்போகும் ம.தி.மு.க
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Mdmk-logo

மற்றவர்களுக்கு உழைப்பதே வைகோவின் ஜாதகம் போலும். தி.மு.கவிற்காக கலைஞரின் போர்வாளாக உழைத்தார். பின்னர் அதிமுகவிற்காக ஜெயலலிதாவின் சகோதரனாக பக்கபலமாக இருந்தார். இரண்டுபேருமே இவரைச் சமயம் பார்த்து கழற்றி விட்டனர். அவ்விரு இடங்களிலும் இருந்தபோதிலும் சரி, அதற்குப் பின்னரும் சரி, விடுதலைப் புலிகளுக்காகவும், கிறுத்துவ சர்ச்சுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆங்காங்கே உள்ள ஒரு சில தொகுதிகளிலும், பகுதிகளிலும் உள்ள ஆதரவினால் சில இடங்களைப் பெற்றுள்ளது ம.தி.மு.க. சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த இக்கட்சி, தற்போது 1.7% வாக்குகளோடு 1 நகராட்சியையும் 7 பேரூராட்சிகளையும் 2 ஊராட்சிகளையும் பெற்று மொத்தம் 197 இடங்களைப் பெற்றுள்ளது. இதை அக்கட்சியே எதிர்பார்த்திருக்காது என்பது நிச்சயம்.
இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அக்கறை கொண்டிருந்தாலும், ஈழப் பிரச்சனையை ஒரு தேர்தல் பிரச்சனையாக தமிழ்கத்து மக்கள் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம். இதை வைகோ போன்றவர்கள் புரிந்திருந்தாலும் அவர்கள் சார்ந்து இருக்கின்ற இடங்களுக்காக ஈழ அரசியலையும் விடுதலைப் புலி ஆதரவையும் விட்டுவிட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான அரசியல் அழிந்துபோவது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது.
தங்கள் வேடதாரித் தலைவர்களை புறந்தள்ளிய தலித் மக்கள்
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Vc

இதைப்போல ஒரு நல்ல விஷயம் தமிழகத்திற்கு நடந்திருக்க முடியாது. தங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகக் காட்டிக்கொண்டு, தங்கள் சமுதாயத்தினருக்கு உருப்படியாக எதையும் செய்யாமல், தங்களின் சுயநலனை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு, திராவிடக் கட்சித் தலைவர்களுடனும் சிறுபான்மை நிறுவனங்களுடனும் கூடிக் குலாவிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை பெரும்பான்மையான ஹிந்து சமுதாயத்திலிருந்து பிரிக்கவேண்டி அத்தனை காரியங்களையும் செய்து கொண்டிருந்த தலைவர்களுக்கு அந்தச் சமுதாயத்தினரே சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவும் சரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சரி, தங்கள் சமுதாயத்தினருக்கு உருப்படியாக ஏதாவது செய்துள்ளனரா என்று பார்த்தால் எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை. ஒரு மூலையில் ஆதரவின்றி இருந்த இவர்கள் இருவருக்கும் அரசியல் அங்கீகாரம் கொடுத்து ‘தலைவர்கள்’ ஆக்கிய ‘பெருமை’ காலம் சென்ற மூப்பனார், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத்தான் சேரும். அன்றிலிருந்து இன்றுவரை இருவரும் ஏதோ தங்களுக்கு பெருத்த ஆதரவு இருப்பது போல ஒரு மாயையை உருவாக்கி திராவிட கட்சிகளிடம் பேரம் பேசியே வளர்ந்து விட்டனர். தாங்கள் வளர்ந்தனரே ஒழிய கட்சியை வளர்க்கவில்லை என்பது இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது.
இவர்கள் இருவரை நம்பி நாங்கள் இல்லை; இவர்களை எங்கள் தலைவர்களாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாகவே தலித் மக்கள் முடிவு கூறியுள்ளார்கள். புதிய தமிழகத்திற்கு 16 வார்டுகளும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 36 வார்டுகளும் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இரு தலைவர்களும் அவர்கள் சமுதாயத்தினராலேயே முழுவதுமாக நிராகரிக்கப் பட்டுள்ளனர். இனி இவர்களின் மிரட்டல்கள் பெரிய கட்சித் தலைவர்களிடம் செல்லாது என்பது நிதர்சனம்.
திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Dmk-300x201

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப்போல், தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்குக் கற்றுக் கொடுத்த பாடத்தை தானும் கவனிக்காமல் விட்டது தி.மு.க செய்த பெருந்தவறு. 2006-ல் பெற்ற வெற்றி சுமாரான வெற்றிதான். 5 வருடங்களும் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் எள்ளி நகையாடி குத்திக் காண்பித்துக் கொண்டிருந்த்து போல ஒரு ‘சிறுபான்மை’ அரசைத்தான் கருணாநிதி நடத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தி.மு.க. ஆடிய ஆட்டமோ ஏதோ வரலாறு காணாத வெற்றி பெற்றது போலத்தான் இருந்தது. குடும்ப அரசியல் கொடி கட்டிப் பறந்தது. ஊடகத்துறை, திரைத்துறை, கனிமவளத்துறை, ரியல் எஸ்டேட் என்று அனைத்துத் துறைகளிலும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரின் அராஜகப் போக்கு பயங்கரமாக இருந்தது. இது போதாதென்று சங்கமம், செம்மொழி மாநாடு என்கிற பெயர்களில் நட்த்தப்பட்ட குடும்ப மற்றும் கட்சிக் கூத்துக்கள் மக்கள் சகிக்க முடியாத அளவிற்கு இருந்தது. அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை ஏப்பம் விட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல்!
தமிழகம் முழுவதும் கடுங்கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தது உண்மை. அந்தக் குமுறல் சட்ட மன்றத் தேர்தலில் எரிமலையாக வெடித்ததுதான் வரலாறு காணாத தோல்வியில் முடிவடைந்தது. ஆட்சியில் இருந்த ஐந்து வருடங்களிலும் குடும்ப அளவிலும் சரி, கட்சி அளவிலும் சரி, கலைஞர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அந்தப் பிரச்சினைகளை சரி செய்த சமயம் போக மற்ற சமயங்களில் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதிலும், பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வதிலும் செலவழித்தார் கலைஞர்.
மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. வெறும் இலவசங்களைக் கொடுத்தால் போதும்; அவ்வப்போது குறிப்பிட்ட சில சமுதாயத்தினருக்கு சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீடுகளுக்கு ஏற்பாடு செய்து, பின்னர் தேர்தல் சமயத்தில் இனாம் கொடுத்தால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போட்டார் போலும். இனாம், இலவசம், இட ஒதுக்கீடு ஆகியவை முக்கியமில்லை; இன்னலற்ற ஆட்சிதான் முக்கியம் என்று மக்கள் தீர்ப்பளித்தனர்.
அப்போது இருந்த மக்கள் மனநிலை சிறிதளவுகூட மாறவில்லை என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன. ஒரு மன ஆறுதலுக்காக இரண்டாவது இடம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. மற்றொரு ஆறுதல் திமுகவின் பாரம்பரிய வங்கியான 25% – 26% வாக்குகள் அப்படியே கட்சியிடம் உள்ளது. மேலும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 22.39% வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடங்கள் கட்டிக்காத்த சென்னை மாநகராட்சியை முதல் முறை அதிமுகவிடம் இழந்ததும் ஒரு பெரிய அடிதான்.
தேர்தல் தோல்வியும் கட்சி நிலைமையும் ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்தால், குடும்பச் சூழ்நிலை மறுபக்கம் அழுத்துகிறது. மகள் சிறையில்; ஜாமீன் கிடைக்குமா தெரியவில்லை; மருமகன் வழிப் பேரனுக்கு எப்போது வேண்டுமானாலும் சிறைவாசம் ஏற்படபலாம்; மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் சுமுகமான போக்கு இருக்குமா தெரியாது; காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் தொடருவதா வேண்டாமா; மாநில அரசின் நடவடிக்கைகளை எப்படி சமாளிப்பது; கதி கலங்கிப் போயிருக்கும் கட்சித் தொண்டர்களை கட்டி நிறுத்துவது எப்படி என்று பல கேள்விகளை தன்னுடைய வயதான காலத்தில் தாங்கிகொண்டு சமாளிக்க முயன்று வருகிறார் கலைஞர்.
தி.மு.க எதிர்காலம் எங்கிருக்கிறது என்று தெரியாமல், வெளிச்சம் கண்ணுக்குத் தெரியாத சூழலில், அடர்ந்த வனாந்திரத்தில் தவிப்பதை போன்று உள்ளது. குடும்பங்கள், கட்சியின் இரண்டாம் தளத் தலைவர்கள், தொண்டர்கள், அன்று அனைவரையும் இணைக்கும் ஒரே சக்தியாகக் கலைஞர் விளங்குகிறார். அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்னவாகும் என்பது அவருக்கும், குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் மட்டுமல்ல; தமிழகத்திற்கே புரியாத, விடை தெரியாத, புதிராகத்தான் இருக்கிறது.
ஆதரவைக் கட்டிக்காக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க.
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Admk-300x261

அ.தி.மு.க தலைவர் ஜெயல்லிதா 2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நொறுங்கிப் போனது உண்மை. சிறுபான்மை அரசை நிர்வகித்தாலும் கூட்டணி பலத்தினால் பிரச்சனை எதுவுமின்றி நிம்மதியாகக் கருணாநிதி காலம் தள்ளுவதைப் பார்க்கப் பொறுக்காமல் அடிக்கடி கொடநாட்டுக்கும் சிறுதாவூருக்கும் ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்தார். வரிசையாக அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்று வந்ததும் அவருடைய தளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. 2006 உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, 2009 பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, அவருக்குப் பெரிதாக ஊக்கமளிக்கும் வகையில் எதுவும் நடந்துவிடவில்லை. பொதுத் தேர்தலில் 9 எம்.பி. இடங்கள் கிடைத்த்து மட்டுமே ஓர் ஆறுதல். ஆயினும் மத்தியில் ஆளும் கட்சி கூட்டணியிலும் தி.மு.க. இடம் பெற்றதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

கட்சித் தொண்டர்களையும் மற்ற தலைவர்களையும் ஊக்கப்படுத்தித் தானும் சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்குமாறு, ஸ்பெக்ட்ரம் ஊழல் அவருக்கு ஒரு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். மற்ற எதிர் கட்சிகளுடன் இணைந்து, இருக்கின்ற 9 எம்பிக்கள் மூலம் மக்களவையில் மத்திய அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகளினால் திமுக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரிசையாக சி.பி.ஐ. ரெய்டுகள், பின்னர் ராஜாவின் பதவி பறிபோனது, கலைஞர் டிவியில் ரெய்டு, ராஜாவுக்குச் சிறை, கனிமொழியையும் தயாளு அம்மாவையும் சி.பி.ஐ விசாரணை செய்த்து என்று தொடர்ந்து பல சவால்களை திமுக சந்திக்கத் தொடங்கிய போது மக்களைச் சந்திக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.
மதுரையில் ஆரம்பித்து தொடர்ந்து கோவை திருச்சி என்று அவர் கட்சி நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு லட்சக் கணக்கில் மக்கள் கூடினர். சுப்பிரமணியன் சுவாமியின் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தைத் தன்னுடைய ஜெயா டிவியின் மூலம் பெரிதும் உபயோகப்படுத்திக் கொண்டார். சுவாமியின் பிரசாரப் பலன் அனைத்தும் அதிமுகவுக்குப் போனது என்றால் அது மிகையாகாது.
இடையே, ஒரு சிக்கலான சமயத்தில், திமுகவை கூட்டணியிலிருந்து விலக்கும் பட்சத்தில் தானும் தன்னுடைய தோழமைக் கட்சிகளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் என்று ஒரு நட்பான கோரிக்கையையும் காங்கிரஸுக்கு வைத்து திமுகவைக் கதிகலங்கச்செய்தார்.
மேலும் 2006ல் கூட்டணி பலத்தினால்தான் திமுக சாதிக்க முடிந்தது என்று நம்பிய காரணத்தால், தானே முன்னின்று பல கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை பலமாக்கினார். மதிமுக வெளியேறியபோதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற கட்சிகளைக் கட்டிக் காப்பாற்றினார். சிறுபான்மை மத நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றார். இத்தனையும் இருந்தும் தமது கூட்டணிக்கு இப்படி ஒரு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரே தேர்தல் முடிந்தவுடன் ஒத்துக்கொண்டார்.
அதன் பிறகு ஐந்தே மாதங்களில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின்படி இலவசத்திட்டங்களை செயல்படுத்தத் துவங்கிய சுறுசுறுப்புடன் கூட்டணிக் கட்சிகளைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிகளுக்கு தன்னுடைய கட்சியினரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகள் வெளியேறியபோதும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளும் அவர் எதிர்பார்த்தது போலவே வந்தது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து இருந்தபோது கிடைத்த 39% வாக்குகள், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான கட்சிகள் விலகிய பின்பும் அதே 39% கிடைத்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்படி கிடைத்துள்ள ஏகோபித்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு சவாலான விஷயம்தான். இந்த மாபெரும் வெற்றி தலைக்கனமாக மாறி அகம்பாவத்தில் கொண்டுவிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இருமுறையும் (96-லும் சரி, 2006-லும் சரி) தான் சந்தித்த பிரச்சினைகளை நினைத்துப் பார்த்து அப்போது செய்த தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே ஜெயலலிதா தன்னுடைய வாக்கு வங்கியை ஓரளவிற்கு பாதுகாக்க முடியும். இது ஜெயலலிதா என்கிற ஒரே ஒரு ஆளுமையின் கையில்தான் இருக்கிறது. தமிழக மக்களால் இரண்டுமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மூன்றாவது முறையாகக் கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில்தான் அவருடைய எதிர்காலமும் கட்சியின் எதிர்காலமும் இருக்கிறது.
பாதையறியாத நிலையில் பா.ஜ.க.
சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை Bjp

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது (199-2004) 4 எம்.பி.க்களும், 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களுமாக இருந்த பா.ஜ.க தற்போது எம்.பி. தொகுதியுமில்லாமல், எம்.எல்.ஏ. தொகுதியுமில்லாமல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. கூட்டணி மூலம் கிடைத்த இடங்கள் என்றாலும் அவற்றைப் பாடுபட்டுத் தக்க வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த அளவிற்குக் களப்பணிகளில் ஈடுபடாதது பெருந்தவறு. 2004 லோகசபா தேர்தலிலிருந்து தமிழகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வந்து தற்போது வெறும் 1.35 % மட்டுமே உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்குப் போட்டியிடாதது மன்னிக்க முடியாத குற்றம். இதைவிட ஒரு தற்கொலை முயற்சி வேறு இல்லை. கோஷ்டிப் பூசல்கள், கழகங்களின் முதுகில் சவாரி என்று காங்கிரஸின் பாதையில் பயணம் செய்வதை முதலில் நிறுத்தவேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்று அணியாக வளர்ந்து வரவேண்டுமென்றால் கழகங்களின் பாதையிலும் பயணிக்கக்கூடாது; காங்கிரசின் பாதையிலும் பயணிக்கக் கூடாது. தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒரு பாதையை ஏற்படுத்த பா.ஜ.க. இனியாவது முயற்சி செய்யும் என்று நம்பலாமா என்பதை அக்கட்சியினர்தான் மக்களிடம் சொல்ல வேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. ஜாதிக் கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகளின் ‘பலம்’ வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறியபோது அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டது புத்திசாலித்தனம். தனித்து தேர்தலை சந்தித்து தன்னுடைய பாரம்பரிய வாக்கு வங்கி பாதிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், வெளியேறியக் கட்சிகளின் உண்மையான பலம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்துள்ளது.
இந்தத் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டியுள்ளது நிலையான வாக்கு வங்கி உள்ள கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்லாது, திருந்த வேண்டிய மற்றும் வளரவேண்டிய கட்சிகளுக்கும் கூடத்தான். தமிழக மக்களின் அரசியல் அறிவும் மனமுதிர்ச்சியும் நன்றாக முன்னேற்றம் கண்டுவருகிறது. அதுவே நமக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை கூட்டுகிறது.

எழுதியவர் - B.R.ஹரன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum